மல்லிகார்ஜுன கார்கேயை டில்லியில் சந்தித்தார் டி.கே. பாண்டியன்
1 min read
D.K. Pandian met Mallikarjuna Karkey in Delhi
3.3.2026
தமிழ்நாடு ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவரும் கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே. பாண்டியன் டெல்லியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகள் வைத்தார்.
டெல்லி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாணவர் பிரிவின் தலைவராக வினோத் ஜாகர் பொறுப்பேற்றுக் கொண்ட பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவரும் கோவிந்தபேரி ஊராட்சி மன்றத்தின் தலைவருமான டி.கே. பாண்டியன் டெல்லி சென்றார்.
விழா முடிந்த பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதியளிக்க மத்திய அரசை வலியுறுத்தும்படியும் கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்பின்போது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுப்புற சூழல் மற்றும் வனங்கள் துறையின் முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லகுமார் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களையும் டி.கே. பாண்டியன் சந்தித்தார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேர நிகழ்ச்சி மாற்றத்தால் சோனியா காந்தியின் நேர்முக உதவியாளர் ஜார்ஜ் பாலிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
-ஜோசப், நிருபர்.