June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்ப சொத்தாக மாறுகிறது- திருச்சியில் மோடி பேச்சு

1 min read

All corrupt money becomes family property – Modi’s speech in Trichy

11.3.2026
கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
திருச்சி: ” திமுக தனக்கு அளிக்கப்பட்ட கடமை, பொறுப்பை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்துள்ளது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திருச்சியில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இரண்டு ஆண்டுகள் முன்பாக திருச்சி அரங்கன் முன்பு தலைவணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது தெய்வீக அனுபவம், கம்ப ராமாயணத்தை கேட்டது என் காதில் இன்றும் ஒலித்து கொண்டு உள்ளது.
திருச்சி நெஞ்சுரம் மற்றும் நம்பிக்கை நிறைந்த நிலம் மருது சகோதரர்கள் வீரத்தை பார்த்த பூமி. கார்கில் போரில் தனது உயிரை தியாகம் செய்து போரிட்ட மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்.
தமிழகம் மற்றும் அதன் கலாசாரத்துக்கு மதிப்பு அளிப்பதில் பாஜக அரசு முன்னணியில் உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சிபிஆர் துணை ஜனாதிபதியாக உள்ளார். சில மாதங்களுக்கு முன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை பெருமைபடுத்தும் வகையில் தபால் தலையை வெளியிட்டார். இது தமிழகத்துக்கு பெருமிதம் சேர்த்தது.
இந்தியா முழுவதும் சந்திப்புகள் வாயிலாகவும், காசி தமிழ் சங்கமம் வாயிலாகவும் தமிழ் மக்களோடு இணைப்பு ஏற்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவேன். மாநிலத்தின் நாடித்துடிப்பை உணர முடிகிறது. ஆடி மாதத்தில் காவிரி பெருகுவது போல், தமிழக தேர்தலில் மாற்றத்திற்கான ஆசை வேகமாக பயணிக்கிறது. அதேபோல், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறிய மாநிலம் தீர்மானித்துவிட்டது. ஒரு குடும்பத்துக்காக மட்டும் அல்ல. அனைத்து குடும்பத்துக்காகவும் செயல்படும் அரசை மக்கள் விரும்புகின்றனர். தேஜ கூட்டணியால் மட்டும் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் அறிந்துள்ளனர்.

20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களுக்காக திருச்சி வந்தேன். மதுரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. திருச்சியில் 5,650 கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களை துவக்கி வைத்து விட்டு கொண்டு வந்துள்ளேன். தமிழகத்தின் எதிர்காலத்திற்கு பெரிய முதலீடு செய்கிறோம். இந்த திட்டம் முக்கியமான துறைகளுக்கு பல பயனுள்ளவையாக இருக்கும்.
தூய்மையான எரிசக்தி, ரயில்வே, நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் இவற்றில் அடங்கும். இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும். தமிழகத்தின் கலாசாரமும், கட்டடவியலும் உலக மக்களை கவர்ந்து இழுக்கின்றன. சுற்றுலா பயணிகள் சென்னை வழியாக மட்டும் வரவில்லை. திருச்சி வழியாகவும் வருகின்றனர். திருச்சியில் புதிய முனையம் அமைக்கப்பட்ட பிறகு பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர். நவீனமாக இருக்கும் வகையில், தமிழக கலாசாரத்தோடு தொடர்புடையதாக கூறினர்.
மாநிலத்தின் மிகப்பழமையான விமான நிலையங்களில் ஒன்று மதுரை. தென் மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மதுரை திகழ்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. உலக நகரங்களில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து அந்த நகரங்களுக்கும் விமான பயணம் தொடரும். இதனால், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மதுரை செல்வதை எளிதாக உணர்வார்கள். விவசாயிகள் தங்களது பொருட்களை நாடு முழுவதும்,உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும். மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லியை, பாரீஸ் நியூயார்க் நகருக்கு மாலையில் கொண்டு சேர்க்க முடியும்.
தேஜ கூட்டணி அரசை பொறுத்தவரை தமிழகத்தின் முன்னேற்றம் என்பது முக்கியமானது. 2014 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் அரசை விட பல மடங்கு அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 3 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் நெடுஞ்சாலைகளுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 2004 – 14 ல் காங்கிரஸ் திமுக செலவு செய்த தொகையை விட 4 மடங்கு அதிகம்
2021 ம் ஆண்டில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், திமுக தனக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்பை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்தனர். திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரே குடும்பத்தில் இருந்து துவங்கி முடிந்து விடுகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்ள் மாறலாம், ஆனால், அதிகாரம் ஒரே குடும்பத்திடம் மட்டும் இருக்கிறது.விஞ்ஞான ஊழலுக்கு பெயர் பெற்றது திமுக. ஒரே குடும்ப ஏடிஎம் ஆக தமிழகத்தை மாற்றி உள்ளது.

இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலைவாங்கி கொடுப்பதாக கூறி பணம் பெற்று பெரிய மோசடியில் சிக்கி உள்ளார். வேலைகள் பணத்திற்காக விற்கப்படும்போது, நடுத்தர ஏழை எளிய இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகிறது. நதிகள் அனைத்தும் கடலில் சென்று சேர்வது போல் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. குடும்பச் சொத்தாக மாறுகிறது.
தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு டெல்டா விவசாயிகள் தான் முதுகெலும்பு. நியாயமான விலை, நவீன வசதிகள், சேமிப்பு கிடங்கிற்கு உரித்தானவர்கள். சேமிப்பு கிடங்கு உருவாக்குவோம் என திமுக கூறியது. ஆனால் அந்த சேமிப்பு கிடங்கு எங்கு என விவசாயிகள் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. நெல்லுக்கு வழங்கப்படும் எம்எஸ்பி உயர்த்தப்படும் என்ற திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என விவசாயிகள் கேட்கின்றனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், ஆறுகள் பாதிக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்படைகிறது. ஆனால், அதற்கு காரணமானவர்களுக்கு திமுகவின் பாதுகாப்பு கவசம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை அரசியல் என்பது மக்கள் நலனை விடமேலானது. ஏழைகளுக்கான வீடுகளை தாமதப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்துக்கு பெரிய திட்டம் வைத்துள்ளோம். பெங்களூரு-சென்னை, சென்னை-ஐதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடங்களை அறிவித்துள்ளோம். இவை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு தமிழகத்தை கொண்டு செல்லும். இதனை செயல்படுத்த, அரசியலை விட மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு தேவை. அத்தகைய அரசை தேஜ கூட்டணி மட்டுமே அளிக்க முடியும்.
ஜன்தன் திட்டம் மூலம் 57 கோடிக்கு மேல் வங்கிக்கணக்கு துவக்கப்பட்டன. இவற்றில் 32 கோடி வங்கிக்கணக்குகள் பெண்களுக்கானது. முத்ரா திட்டம் மூலம் சிறு தொழில்முனைவோருக்கு பல லட்சம் கோடி கடன் அளித்துள்ளோம். 16 லட்சம் கோடி ரூபாய் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊரக திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தனியாகவோ, கூட்டாகவோ 3 கோடி பெண்கள் உரிமையாளர் ஆகின்றனர். சட்டசபை பார்லிமென்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளோம். பெண்களுக்கான அதிகாரப்பகிர்வை மத்திய அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
மேற்காசியாவில் நடக்கும் போர் ஒட்டுமொத்த எரிசக்தி விநியோகத்தை பாதித்துள்ளது. இந்தியாவிற்கு முதன்மை என்ற கொள்கையை உறுதியாக வைத்துள்ளோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தியர்களின் நலனுக்கு முதன்மை அளிப்பதை அரசு பின்பற்றி வருகிறது. இந்த சூழ்நிலையிலும் கூட நமது அணுகுமுறை அதேபோன்று தான் இருக்கும்.யாரும் பயப்படவோ பீதி அடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். நாம் சரியான தகவலை மட்டும் பரப்ப வேண்டும், சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டும் பிரசாரம் செய்ய வேண்டும்.

கோவிட் காலத்தில், இந்தியா எப்படிப்பட்ட முதிர்ச்சியான நாடு என்பதை 140 கோடி மக்கள் உலகிற்கு எடுத்து காட்டினார்கள். ஒரு நாடு என்ற வகையில் ஒவ்வொரு சூழ்நிலையையும் வெற்றிகரமாக கடந்து செல்வோம்.தமிழகத்தின் வரலாற்றில் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் முக்கியமானது. மக்கள் முன் இருக்கும் தேர்வு தெளிவாக உள்ளது. மக்களிடம் ஆழமான அறிவு உள்ளது. அதன் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. வளமான தமிழகத்தை உருவாக்குவோம். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம். தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது. தேஜ கூட்டணியை விரும்புகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *