‘இந்தியாவுக்கு வந்த எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி?
1 min read
How did the oil tanker bound for India cross the Strait of Hormuz?
13.3.2026
ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியையும் மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எண்ணெய் கப்பல்கள் கடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. .
இருப்பினும் அந்த ஜலசந்தி வழியாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 டன் (சுமார் 10 லட்சம் பேரல்) கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று தடைகளை கடந்து இந்தியா வந்துள்ளது. அதாவது போர் பதற்றத்துக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் கப்பல் வந்து சேர்ந்துள்ளது. லைபீரியா நாட்டு கொடியுடன் “ஷென்லாங் சூயல்மாக்ஸ்” என்ற பிரம்மாண்ட கப்பல், சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவிலிருந்து கடந்த 1-ந்தேதி தனது பயணத்தை தொடங்கியது. அனைத்து தடைகளையும் கடந்து நேற்று முன்தினம் இரவு மும்பை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
இந்த கப்பல் பயணத்தை ஒரு இந்தியரான கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 பேர் கொண்ட சர்வதேச குழுவினர் மேற்கொண்டனர். ஈரான் படைகளின் தாக்குதல் அல்லது கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, கடந்த 8-ந்தேதி ஜலசந்தியை கடக்கும்போது கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (ஏ.ஐ.எஸ்.) தற்காலிகமாக அணைக்கப்பட்டது. கப்பல் எங்கே இருக்கிறது என்பதை காட்டும் சிக்னல்களை நிறுத்திவிட்டு, ‘டார்க் மோட்’ முறையில் மிகவும் ரகசியமாக இந்த பகுதியை கடந்து, 9-ந்தேதி மீண்டும் சிக்னல்களை இயக்கியது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் நாட்டு மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியாவுக்காக திறக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியை கடக்க இதுவும் காரணமாக கருதப்படுகிறது.