திமுகவின் கூட்டணியில் சலசலப்பு; அண்ணாமலை பேட்டி
1 min read
There is turmoil in the DMK alliance; Annamalai interview
14.3.2026
திமுக கூட்டணியில் உள்ளே இருக்கும் சலசலப்பை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழக அரசியலில் எப்பொழுதும் தேர்தல் தேதி நெருங்கும் போது டுவிஸ்ட் இருக்கும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஒன்றுமில்லாத காங்கிரசுக்கு 3 தொகுதிகள் உயர்த்தி கொடுக்கிறீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி நாங்கள் இவ்வளவு கஷ்டம் படுகிறோம்.
எங்களுக்கு என் சீட் கொடுக்கவில்லை. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கிளம்பியாச்சு. வைகோ 4 தொகுதிகள் என்கிறார். எப்படிப்பட வைகோ இப்படி ஆகிவிட்டார். எத்தனை தொகுதியில் நின்றவர். தமிழக அரசியலை மாற்ற வேண்டும் என நினைத்தவர். ஒரு சீட், இரண்டு சீட்
அந்த 4 தொகுதியிலும் உதயசூரியன் 3. எங்கள் சின்னம் ஒன்று என்று சொல்கிறார். அந்த கூட்டணியில் இருந்து தலைவர்கள் வெளியே வருவதை நான் பார்க்கிறேன். திருமாவளவன் கண்டிப்பாக இவர்கள் கொடுக்கும் 6,7 சீட்களை ஏற்றுக்கொள்ள போவது கிடையாது.
கூட்டணியில் இருந்து விசிக, கம்யூனிஸ்ட் வெளியே வந்து வேறு கூட்டணியுடன் நிற்கிறார்களா, தனியாக நிற்கிறார்களா என்று தெரியாது. திமுக யாரு வந்தாலும் பிடித்து ஒரு சீட், இரண்டு சீட் என்று கொடுத்து அவர்களோடு இத்தனை ஆண்டுகாலமாக பயணம் செய்தவர்களுக்கு ஒரு சீட், இரண்டு சீட் என்று குறைக்கும் போது, எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள்.
கூட்டணியில் மாற்றம் வருமா என்று கேட்டீர்கள். கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுகவின் கூட்டணியை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம். உள்ளே இருக்கும் சலசலப்பை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழக அரசியலில் எப்பொழுதும் தேர்தல் தேதி நெருங்கும் போது டுவிஸ்ட் இருக்கும்.
இந்த முறையில் என்ன மாற்றம் வரும் என்று பொருந்திருத்து பார்ப்போம். எரிபொருள் தட்டுப்பாடு என திமுக கூட்டணி பொய்யை பரப்பி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து தவெகவிடம் தான் கேட்க வேண்டும். விஜய்க்கு பாஜ எந்த நெருக்கடியும் தரவில்லை
தேஜ கூட்டணி பலமாக உள்ளது, யாரையும் எதிர்பார்த்து இல்லை. விளாத்திக்குளம் சிறுமி மாயமான மார்ச் 10ம் தேதியே தூத்துக்குடி குளத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்காமல் போலீசார் அலட்சியம் செய்துள்ளனர். சிறுமி மாயமான பிறகு தேடுதல் நடந்த இடத்திலேயே சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
புகார் கொடுத்த உடனேயே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி தற்போது உயிரோடு இருந்திருப்பார். விளாத்திகுளம் போலீசாரின் தோல்வி என்று சொல்வதை விட, துறையை நிர்வாகிக்க கூடிய முதல்வர் ஸ்டாலினின் முழுத் தோல்வி. இது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஸ்டாலின் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க; அதேபோல் உங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிடும் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நீங்கள் அந்த இரண்டு சிறுவர்களிடமும், ரீல்ஸ் போடுவதோடு மட்டுமல்லாமல், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன அறிவுரை, இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை. நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கட்டிடங்கள் இல்லாமல், குடிநீர் வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றன.
பல்லி விழுந்த உணவு உண்டு, 43 பள்ளிக் குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு தரமற்ற காலை உணவும், அழுகிய முட்டையுடன் மதிய உணவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டுவிட்டு, கல்வி நேரம் போக, தங்கள் கடின உழைப்பினால், இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகியிருக்கும் இரண்டு சிறுவர்களையும், உங்கள் விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே?
முதல்வர் ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்திக் கொடுங்கள். பள்ளிகள் வரை வந்துவிட்ட கஞ்சா உட்பட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.