எந்த நாட்டின் உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை- டிரம்ப் விரக்தி
1 min read
America doesn’t need help from any country – Trump frustrated
17.3.2026
மத்திய கிழக்கில் ஏற்பட்டு உள்ள போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை எந்த நட்பு நாடும் ஏற்கவில்லை. இதனால் டிரம்ப் அதிருப்தி அடைந்து உள்ளார்.
இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் எந்ந நாட்டின் உதவியும் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம். உலகில் உள்ள நாடுகளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.
கூட்டுப் பாதுகாப்பு என்ற கருத்து இருந்தபோதிலும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் உதவவில்லை. நான் அவர்களிடம் உதவிக்காக மிகவும் வற்புறுத்திப் பேசுவதில்லை. ஏனெனில் எனது மனநிலை இதுதான். நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள் போதிய ஆர்வம் காட்ட வில்லை.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் நான் திடுக்கிட்டு போனேன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டோம்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை தாக்கும் நட வடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருக்கக் கூடாது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும். ஆனால் இந்த வாரத்திற்குள் போர் முடிய வாய்ப்பில்லை.
ஈரானின் பல்வேறு பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன. ஈரான் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்களில் 90 சதவீதத்தையும், டிரோன் தாக்குதல்ளில் 95 சதவீதத்தை நாங்கள் குறைத்து உள்ளோம். ஈரானின் வான் வழித் தடுப்பு சாதனங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டன.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.