சமையல் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விடவில்லை; காத்திருங்கள்- மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read
Cooking gas cylinders are not exhausted; wait – Central Government instructions
19.3.2026
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரால் இந்தியா உள்பட பல நாடுகளில் எரிசக்தி வினியோகம் முடங்கி இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் 60 சதவீத சமையல் கியாஸ் தடைபட்டு இருக்கும் நிலையில், நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கி வரும் மத்திய அரசு, ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வழங்கும் சிலிண்டர்களை ரத்து செய்தது. பின்னர் 20 சதவீத வினியோகம் வழங்கப்பட்டது. இதை தற்போது மேலும் 10 சதவீதம் அதிகரிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சமையல் கியாஸ் வினியோகம் தடைபட்டு இருக்கும் நிலையில், இயற்கை எரிவாயு வினியோகம் தடையின்றி நடந்து வருகிறது. எனவே சமையல் கியாஸ் பயன்பாட்டாளர்கள் தங்கள் அருகில் நகர எரிவாயு வினியோக நெட்வொர்க் இருக்கும் இடங்களில், இயற்கை எரிவாயு இணைப்புக்கு மாற வேண்டும்.
அனைத்து பழைய விண்ணப்பங்களுக்கும் அனுமான அனுமதிகளை வழங்கினால் 10 சதவீதம் கூடுதல் வணிக கியாஸ் சிலிண்டர் வழங்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். இந்த சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதும், ஒப்புதல்களை விரைவுபடுத்துவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும்.
நாட்டின் எந்த பகுதியிலும் சமையல் கியாஸ் தீர்ந்து விடவில்லை. அதே நேரம் நிலைமை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இறக்குமதி தடைபட்டிருப்பதே இதற்கு காரணம்.
சிலிண்டர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு 93 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் சமையல் கியாஸ் நிறுவனங்களிடம் நுகர்வோர் வரிசை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் வீட்டிலேயே சிலிண்டர் வினியோகிக்கப்படும்.
பதற்றத்துடன் முன்பதிவு செய்யவோ அல்லது வினியோகஸ்தர்களிடம் செல்லவோ தேவையில்லை. கியாஸ் சிலிண்டர்கள் மீதான அழுத்தத்தை தணிக்க, இயற்கை எரிவாயு இணைப்பை பயன்படுத்துமாறு வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டு நுகர்வோரை அரசு ஊக்குவிக்கிறது. இதற்காக நகர கியாஸ் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வேகமாக இணைப்புகளையும் வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.