சக மாணவர் வாங்கிய நகையை திருப்பி தராததால் கல்லூரி மாணவி தற்கொலை
1 min read
College student commits suicide after fellow student refuses to return jewelry she bought
6.4.-2026
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் லேகா ஸ்ரீ (17 வயது). கல்லூரி மாணவியான லேகா ஸ்ரீ, நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவன் ஒருவர், அவசர தேவை என கேட்டதால் மாணவி லேகா ஸ்ரீ, தனது வீட்டில் இருந்த 4 பவுன் நகைகளை அவருக்கு கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நகையை பெற்றுக் கொண்ட மாணவன், அதனை திருப்பித் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் லேகா ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் மாணவியின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.