தொகுதி மறுசீரமைப்பு மசோதா பாராளுமன்றத்தில் தோல்வி
1 min read
No support for constituency reorganization bill in Parliament vote
17.4.2026
லோக்சபாவில் மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இது நிறைவேறுவதற்கு 3ல் 2 பங்கு(540 பேரில் 360 பேர்) ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு 298 பேர் மட்டுமே ஆதரவு கிடைத்தது.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை, 2029 முதல் அமலாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசியல் சாசன சட்டத்தின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மெஹ்வால் தாக்கல் செய்தார். யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
இந்த திருத்த மசோதாக்களை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
இந்த மசோதாக்கள் மீது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பிக்கள், பிரியங்கா, ராகுல், திமுக எம்பி கனிமொழி, சமாஜ்வாதி எம்பி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பேசினர். எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்த்து பேசினர். பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் மசோதாவை ஆதரித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து, மசோதாக்கள் மீது இன்று ஓட்டெடுப்பு நடந்தது. இந்த அரசியலமைப்பு மசோதாக்கள் நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. அதாவது லோக்சபாவில்(மக்களவை) 540 எம்பிக்களில் 2 பங்கான 360 எம்பிக்கள் ஆதரவு தேவைப்பட்டது.
ஆனால், ஓட்டெடுப்பில் மசோதாக்களுக்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 பேரும் ஓட்டுப் போட்டனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் மசோதாக்கள் வெற்றி பெறவில்லை.