கோடையில் கால்நடைகளை பராமரிப்பது குறித்து தென்காசி ஆட்சியர் விளக்கம்
1 min read
Tenkasi Collector explains about caring for livestock in summer
30.4.2026
தென்காசி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கோடைகாலத்தில் கால்நடைகளை பராமரிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர். இ.ஆப, அவர்கள் அறிவுரை.
கறவை மாடுகளுக்கான கோடைகால பராமரிப்பு
கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாவது குடிப்பதற்கு உகந்த குடிநீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும். இதுபோன்ற காலகட்டங்களில் உப்பு கட்டிகளை (SALT LICK) கொட்டகைகளில் தொங்கவிடுவதினால் கால்நடைகளில் தண்ணீர் பருகும் தன்மை அதிகரிக்கும். நீர்தெளிப்பான் அமைத்து குளிர்ந்த நீரினைக் கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின் விசிரி அமைப்பது ஆகியவை மூலம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் அயர்ச்சியினைத் தவிர்க்கலாம். மேலும் மாட்டுக் கொட்டகையின் கூரைக்கு மேலேயும் நீர் தெளிப்பான் அமைக்கலாம் இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும். கறவை மாடுகளில் மாலையில் பால் கறக்கும் நேரத்தை தாமதப்படுத்த வேண்டும். எருமை மாடுகள் வளர்ப்போர் குளியல் தொட்டிகளை உருவாக்கி மாடுகளை வெயில் நேரங்களில் அத்தொட்டிகளில் விடும்போது வெப்ப அயர்ச்சியிலிருந்து மாடுகளைப் பாதுகாக்கலாம். கோடைகாலங்களில் மாடுகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். கால்நடைகளின் தீவனத் தோவைகளைப் பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ் பசுந்தீவனம்) அசோலா உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். பருவ மழை காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும்பொழுது அவற்றினை ஊறுகாய்த் தீவனமாக மாற்றி கோடையில் உணவாக அளிக்கலாம்
ஆடுகளுக்கான கோடைகால பராமரிப்பு மேலாண்மை
பொதுவாக வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் செம்மறியாடுகளில் உடல் ரோமங்கள் அதிகமாக இருப்பதால் அச்செம்மறியாடுகளில் வெப்ப அயர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும். கோடை காலங்களில் ஆடுகளுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளை தாது உப்பு கட்டிகள் கட்டி தொங்க விடுவதன் மூலம் அளிக்கலாம் உயர்வளி ஏற்றத்தால் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க வைட்டமின் ஏ. இ மற்றும் சி முதலியனவற்றை அளிக்கலாம் ஒரு B முதல் 12 லிட்டர் அளிவிற்கு தினசரி நீர் அருந்தும் கோடைகாலங்களில் மேய்ச்சல் பகுதியில் நல்ல சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் பொழுது கொட்டகையின் மேற்கூறையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றைப் பரப்பி அதன்மேல் தண்ணீர் தெளித்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இறப்பு ஏற்படுதல் வளர்ச்சி குறைதல் போன்றவற்றை தவிர்க்க முடியும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது ஆடுகளை காலை 6 மணி முதல் 11 மணி வரை மேய்ச்சலுக்கு உட்படுத்தலாம். அதேபோன்று மாலை நேரங்களில் மீண்டும் மேய்ச்சலுக்கு மாலை 3 மணி முதல் 7 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
கோழிகளுக்கான கோடைகால பராமரிப்பு மேலாண்மை
கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்கக் கூடாது. மாறாக இரவிலும் விடியற்காலைப் பொழுதிலும் தீவனம் அளிக்க வேண்டும். கோடையில் கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமாக இடவசதி அளிக்க வேண்டும். அதாவது ஒரு அறையில் வழக்கத்தை விட 20 விழுக்காடு குறைவான எண்ணிக்கையிலேயே கோழிகளை வளர்க்க வெண்டும். கோடையில் ஈரமான எச்சத்தால் கூளம் கட்டியாகிப் போனால் அதுவே அதிக வெப்பம் உண்டாகக் காரணமாகி விடுவதால் கூளத்தை அவ்வபோது மாற்ற வேண்டும். கோழிகளுக்கு குடிநீரில் வைட்டமின் சி மருந்தினை கோழி ஒன்றிக்கு 10 மில்லி கிராம் வீதம் கொடுக்கலாம். மேலும் கோழிகளுக்கு அயர்ச்சி நீக்கும் பி காம்பிளக்ஸ் குளுக்கோஸ் போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.
வெயில் காலங்களில் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கவனிக்க
வேண்டியவை
கால்நடைகளை இடமாற்றம் செய்வதை நன்கு திட்டமிட்டு அவற்றின் நலன் பாதிக்காவண்ணம் செயல்படுத்த வேண்டும். நன்கு தெரிந்த வழியில் நிழல் மற்றும் தண்ணீர் இருக்கும் ஓய்விடங்களைக் குறித்துக் கொண்ட பின்னர் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் இடமாற்றம் செய்வது சாலச் சிறந்தது. ஒய்விடங்களில் வாகனத்தை நிழலில் காற்றின் திசைக்கு எதிராக நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஆடுகளிடையே காற்றோட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் வாகனத்தினுள் வெப்பம் அதகரிப்பதைத் தடுக்க குறைந்த நேரமே ஓய்விடங்களில் வாகனத்தை நிறுத்த வேண்டும். கால்நடைகளுக்கு இடையில் நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்த வாகனத்தின் கொள்ளளவில் 85 விழுக்காட்டிற்கு மட்டுமே கால்நடைகளை ஏற்ற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.