இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
1 min read
Rs. 50 lakh beedi leaves seized in Thiruchendur, attempted to be smuggled to Sri Lanka
14.5.2026
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூர்யா டிம்பர் டிப்போ பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சூர்யா டிம்பர் டிப்போவில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் இன்று அதிகாலையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் நரசன்விலையைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மேக்கிங் செல்வம் (வயது 28) என்பவர், ஒரு மினி லோடு வாகனத்தில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 38 மூடை பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார், மினி லோடு வாகனத்தை ஓட்டி வந்த செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.