வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
1 min read
Former MLA Panaiyur Babu resigns from V.C.K.
24.5.2026
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தோழர்களுக்கு வணக்கம்.. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது.
ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். புரட்சியாளர் அம்பேத்கரின் “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன்.
இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்.