‘தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது’ – சீனா எச்சரிக்கை
1 min read
‘India should not interfere in the Dalai Lama election issue’ – China warns
25/5/2026
தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது.
திபெத் விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியா இதில் தலையிட்டால், அது இருதரப்பு உறவுகளை மேலும் சீர்குலைக்கும் ஒரு “முள்வேலிப் பிரச்சினையாக” மாறும் என்றும் சீனா கூறியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவிற்கான சீன தூதர் யூ ஜிங்,
“தலாய் லாமாவின் மறுபிறவி என்பது பல நூற்றாண்டுகளாக சீனாவின் மத்திய அரசின் ஒப்புதலைக் கோரும், நீண்டகாலமாக நிறுவப்பட்ட மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளைப் பின்பற்றுகிறது. தற்போதைய 14-வது தலாய் லாமாவும் இந்த நிறுவப்பட்ட செயல்முறையின் மூலமே அங்கீகரிக்கப்பட்டார்.
தலாய் லாமாவின் மறுபிறவி விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்விஷயமாகும், இதில் வெளித் தலையீடுகள் இருக்கக்கூடாது. “மத்திய திபெத்திய நிர்வாகம்” என்று அழைக்கப்படும் அமைப்பை எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும் அங்கீகரிக்கவில்லை, மேலும் அதன் தலைமைக்கு திபெத்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பூர்வ தகுதியோ அல்லது மறுபிறவி செயல்முறை குறித்து உரிமை கோருவதற்கான அதிகாரமோ இல்லை.
திபெத் தொடர்பான விவகாரங்களில் இந்தியா தெளிவான உறுதிமொழிகளை அளித்துள்ளது. இந்தியா இந்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து மதிக்கும் என்றும், ‘திபெத்திய சுதந்திரத்தை’ ஆதரிக்கும் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்காது என்றும், தலாய் லாமாவின் மறுபிறவி விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்க்கும் என்றும் மனப்பூர்வமாக நம்பப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறை நமது இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கும் சாதகமாக பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது 90வது பிறந்தநாளில் பேசிய14-வது தலாய் லாமா, அடுத்த தலாய் லாமாவை அடையாளம் காணும் முழு அதிகாரம் தனது இலாப நோக்கற்ற அமைப்பான காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார். 14வது தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ உள்ளார்.
தலாய் லாமா என்றால் யார்?
தலாய் லாமா என்பவர் திபெத்திய பௌத்த மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவர் ஆவார். திபெத்திய மொழியில் ‘தலாய் லாமா’ என்றால் “ஞானக் கடல்” என்று பொருள். இவர் திபெத்திய மக்களின் ஆன்மீக வழிகாட்டியாகவும், வரலாற்று ரீதியாக அவர்களின் அரசியல் தலைவராகவும் இருந்துள்ளார்.
திபெத்திய பௌத்த நம்பிக்கையின்படி, தலாய் லாமா என்பவர் திபெத்தின் பாதுகாவல் தெய்வமாக கருதப்படும் ‘அவலோகிதேஷ்வரா’ என்ற போதிசத்துவரின் மனித உருவாக பார்க்கப்படுகின்றனர்.
ஒரு தலாய் லாமா மறைந்த பிறகு, அவரது ஆன்மா மற்றொரு குழந்தையாக மறுபிறவி எடுக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை. தற்போது 14-வது தலாய் லாமாவாக இருக்கும் டென்சின் கியாட்சோ 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.
1959 ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது, இந்தியாவிற்கு வந்து தஞ்சமடைந்தார். தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா பகுதியில் வசித்து வருகிறார். அங்கிருந்தபடியே திபெத்திய அரசை வழிநடத்துகிறார்.