ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்க திட்டம்- சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
1 min read
Private gold mine project in Andhra Pradesh – Chandrababu Naidu inaugurates it.
24.6.2026
ஆந்திராவில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் நிறுவன தங்க சுரங்கம் மற்றும் தங்க சுத்திகரிப்பு திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள கர்னுால் மாவட்டத்தில், ‘ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா’ மற்றும் ‘டெக்கான் கோல்டு மைன்ஸ்’ ஆகிய தனியார் நிறுவனங்கள் தங்க சுரங்க திட்டத்தில் ஈடுபட உள்ளன.
இதற்காக மாநில அரசு 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை தங்க சுரங்க திட்டமாக இது கருதப்படுகிறது. அதில், முதல் கட்டமாக 600 ஏக்கரில் சுரங்க பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார்.
மேலும், இரண்டாம் கட்ட திட்ட பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இது குறித்து ஆந்திர அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு: தங்க சுரங்கத்தில் இருந்து முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு, 900 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பின், ஆண்டுக்கு, 2,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் அளவுக்கு திட்டத்தை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வாயிலாக 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுரங்கத்தில் உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதம் உரிமைத் தொகையாக மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.