திமுகவின் மேலும் 6 ஊழல்களையும் தவெக அரசு விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
1 min read
Annamalai urges the TVK government to investigate six more corruption cases involving the DMK.
26.6.2026
திமுக ஆட்சியில்அரங்கேறியதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தவெக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு இது நம்ம இயக்கம் நிறுவனர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்து உள்ளார். மேலும் அவர் ஒரு ஊழல் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு;
2022ம் ஆண்டு சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு இல்லம் மற்றும் அவர் தொடர்பு உடைய இடங்களில் சோதனை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
முந்தைய திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தவெக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறேன். இந்த வழக்குகளை தவெக அரசு விரைந்த விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.
எ.வ. வேலு வழக்குடன், கடந்த 5 ஆண்டு காலத்தில் பின்வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தவெக அரசு கவனத்தில் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
- விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கி, பின்னர் ரத்து செய்யப்பட்ட பிஜிஆர் எனர்ஜி ஒப்பந்த ஊழல்
- ஆவின் குறைந்த செலவில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முன்வந்த போதும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டதில் ஊழல்.
- பொங்கலுக்காக வழங்கப்பட்ட வேட்டியில் பருத்திக்கு பதில் அதிகளவு பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டது. அதற்கான ஆவணங்கள் மாவட்ட வேளாண் கழகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
- அரசு போக்குவரத்து துறையில் நடைபெற்றுள்ள பல ஊழல்கள் மற்றும் ஒளிரும் தகடுகளை பொருத்தியதில் முறைகேடுகள்.
- தமிழ்நாடு மருத்துவக் கழக ஊழல்கள்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல்கள்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து இவற்றுக்கு தீர்வு காண தவெக அரசு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நம்புகிறோம். மேலும், பல ஆண்டுகளாக உதயநிதியின் சினிமா ரசிகர் மன்றமும், நோபிள்ஸ் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்டது ஏன்?
ஸ்டாலின் துபாய் பயணத்தை தொடர்ந்து, நோபிள்ஸ் ஸ்டீல் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது ஆகியவை குறித்தும் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.