அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செஷல்ஸ் சென்றார்
1 min read
Prime Minister Modi visited Seychelles on an official trip.
27.6.2026
பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸ் நாட்டுக்கு இன்று சென்றார்.
செஷல்ஸ் நாட்டின் 50-ஆம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப் பிரிவினர் இந்த தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடுகிறார். வரலாறு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடர்புகளில் இந்தியா மற்றும் செஷல்ஸ் நீண்டகால கூட்டுறவு கொண்டுள்ளன.
பிரதமரின் தற்போதைய பயணம், இருதரப்பு வலுவான, நீடித்த உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று மத்திய வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு செஷல்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.