June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிட முடிவு

1 min read

Seeman is entering the fray in the Ambasamudram constituency.

27/6/2026
தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்றும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் போட்டியிட போவதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 17-வது சட்டசபை தேர்தல் நிறைவுபெற்று, அதில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

முதல்-அமைச்சர் விஜய், வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 5 பேர் தங்கள் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அந்த வகையில் இந்த 6 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளார். இதுகுறித்து அவர் நிருபரிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பினோம். உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தோல்வி அடைந்திருக்க கூடாது என்று பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய ஆதங்கத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்கள்.

தற்போது காலியாக உள்ள 6 தொகுதிகளில் ஏதேனும் தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியினரின் விருப்பமாக இருக்கிறது. பிற கட்சிகளை சேர்ந்தவர்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கிறது.

எனவே இந்த 6 தொகுதிகளில் எந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்று ஆலோசித்த போது, அம்பாசமுத்திரம் தொகுதி உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. இடைத்தேர்தல் நடைபெறும் 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். எத்தனையோ களத்தை சந்தித்துவிட்டேன். இந்த களத்தையும் சந்திக்க தயாராகிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசியல் களம் மீண்டும் சூடிபிடிக்க தொடங்கி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *