வாட்ஸாப்பில் பயனர் பெயர் முறையை நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு
1 min read
Central Government orders suspension of WhatsApp’s username feature.
1/7/2026
வாட்ஸாப்பில் பயனர் பெயர் முறையை அறிமுகம் செய்வது குறித்து மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில் ஆலோசனை முடியும் வரை அதனை நிறுத்திவைக்க உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில், மொபைல் செயலிகளை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை பல்வேறு முறைகளில் சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக குற்றவாளிகள் வாட்ஸாப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸாப் செயலியில் புதுப்புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை வாட்ஸாப் வாயிலாக மற்றவரை தொடர்பு கொள்ள மொபைல் எண் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக மொபைல் எண்ணிற்கு பதிலாக பயனர்களின் பெயரில் கணக்கை பராமரிக்க அந்நிறுவனம் புது வசதியை கொண்டு வந்துள்ளது. தற்போது இதற்கான அப்டேட் பலருக்கு வந்து கொண்டுள்ளது. இருப்பினும், இது கட்டாயம் இல்லை. பயன்படுத்துவது பயனர்களின் விருப்பம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய வசதி குறித்தும், அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்து வந்தது.
இந்நிலையில், இந்த புதிய அம்சம் குறித்து மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இந்த புதிய முறை எப்படி செயல்படும், அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், குற்றவாளிகள் அதனை தவறாக பயன்படுத்துவதை எப்படி தடுக்க முடியும் என்பது குறித்து விரிவாக விளக்கும்படி கூறப்பட்டு உள்ளது. 3 நாட்கள் காலக்கெடு விதித்துள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும் வரை பயனர் பெயர் முறையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.