லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு ஆஜர்
1 min read
E.V. Velu appears for inquiry by the Directorate of Vigilance and Anti-Corruption.
15.7.2026
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஒன்பது பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலு வீடு உட்பட, 20 இடங்களில் கடந்த ஜூன் 25ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க கடந்த 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு எவ வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வக்கீல்கள் தெரிவித்தனர். இன்று ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வேலு ஆஜரானார்.