லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
1 min read
TVK functionary expelled from the party for accepting a bribe.
15.7.2026
லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியான நிலையில் தவெக நிர்வாகி வீராசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியது போன்ற விடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விடியோ தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுதொடர்பாக பேசியிருந்த வீராசாமி, “என்னுடைய பெயரையும் முதல்வர் விஜய்யின் பெயரையும் கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அது கைமாத்து பணம். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை. நான் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
லஞ்சம் வாங்கியது தொடர்பான விடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலர் தினகரன் அறிவித்துள்ளார்.
வீராசாமி, தவெகவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த வீராசாமி இன்று முதல் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப் படுகின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.