கோவை அருகே வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே புகுந்த காட்டு யானை
1 min read
A wild elephant opened the gate of a house near Coimbatore and entered the premises.
29/7/2026
கோவை அருகே தடாகம் பகுதியில் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் பெரிய தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் அங்கு அடிக்கடி காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பெரிய தடாகம் பகுதிக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, அங்குள்ள ஒரு குடியிருப்பு வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டைத் தனது தும்பிக்கையால் மிகவும் லாவகமாகத் திறந்து கொண்டு உள்ளே சென்றது.
வீட்டின் வளாகத்திற்குள் சென்ற அந்த யானை, அங்கு வைக்கப்பட்டிருந்த கால்நடை தீவனங்களைத் தேடிப் பார்த்தது. ஆனால், பசியாற அங்கு உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்த அந்த யானை எவ்விதப் பொருட்களையோ அல்லது வீட்டையோ சேதப்படுத்தாமல், வந்த வழியிலேயே அதே கேட் வழியாக அமைதியாக வெளியேறியது.
யானை மனிதர்களைப் போல மிகச் சாதாரணமாகத் தனது தும்பிக்கையைப் பயன்படுத்தி வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே செல்லும் இந்த ஒட்டுமொத்த சம்பவமும், அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியது. இந்த பகீர் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
கடந்த சில நாட்களாக பெரிய தடாகம் மற்றும் அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், யானைகள் இதுபோன்று குடியிருப்புப் பகுதிகளுக்குள் எளிதாக நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.