புளியறையில் போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகள் ஒரே இடத்தில் செயல்படும்
1 min read
Traffic and police checkposts will operate at the same location in Puliyarai.
13/8/2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியறை கிராமத்தில் தென்காசி வட்டார போக்குவரத்துச் சோதனை சாவடி இயங்கி வருகிறது. மேற்கண்ட வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியின் அருகில் சுமார் 1 கி. மீட்டர் தொலைவில் தென்காசி மாவட்ட காவல்துறையினரின் சோதனைச்சாவடியும் செயல்பட்டு வருகிறது.
மேற்படி இரண்டு சோதனைச்சாவடிகளிலும் கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றால சீசன் காலங்களில் அதிகமான போக்குவரத்து நெருக்கடிக்கு உட்படுவதாகவும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
மேலும் மேற்கண்ட இரண்டு சோதனைச்சாவடிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் கனரக வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து அனுமதி பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் புளியறை போக்குவரத்துச் சோதனை சாவடி இனி தனியாக செயல்படாமல் அருகிலுள்ள காவல்துறை சோதனைச்சாவடியுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.