கேரளாவில் துணிகரம்: ஐபோனுக்காக தாத்தாவை கொன்ற பேத்தி
1 min read
Daring crime in Kerala: Granddaughter kills grandfather for an iPhone.
19/8/2026
ஐபோனுக்காக தனது நண்பர்கள் உதவியுடன் தாத்தாவைக் கொலை செய்த பேத்தியின் செயல் கேரளாவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளம் மாநிலத்தின் ஆலப்புழாவில் சிவன்குட்டி என்ற முதியவர் (வயது 67), கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஒரு துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததால் இந்த வழக்கை கொலை மற்றும் கொள்ளை வழக்காகக் கருதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவன்குட்டியின் பேத்தியான 13 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களின் விவரம் வருமாறு:
தனது காதலனான 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேர் சேர்ந்து சிவன்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக சிவன்குட்டியை கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
சிறுமியின் காதலன், அவனது நண்பர்கள் ஆகியோர் இணைந்து கொலையை செய்ததாகவும், சிறுமி காணொலி அழைப்பில் இருந்தபடி சம்பவத்தை ஒருங்கிணைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டில் தனியாக இருந்ததும், ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு இந்தக் கொடூர கொலை நடந்ததும் தெரிய வந்தது.
அதற்கு முந்தைய தினம் முதியவரின் இளைய மகள் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு துணையாக இருக்க முதியவரின் மனைவியும் அங்கு சென்றதும் தெரியவந்தது.
ஐபோனுக்காக தாத்தாவை பேத்தியே கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.