திருப்பதி திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்கு தடை
1 min read
Ban on cauliflower dishes at Tirupati Tirumala
24/8/2026
உலக புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பதி திருமலையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் துரித உணவு மையங்களில் காலிபிளவர்மூலம் தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவுகளையும் விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது.
திருமலையில் இயங்கி வரும் சில தனியார் ஹோட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் விற்பனை செய்யப்படும் கோபி மஞ்சூரியன், கோபி ரைஸ் மற்றும் காலிபிளவர் பக்கோடா போன்ற உணவுகளில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் கிடப்பதாக, ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் தரப்பில் இருந்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு அடுத்தடுத்து அடுக்கடுக்கான புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.
பக்தர்களின் புகார்களைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் திருமலையில் உள்ள பல்வேறு தனியார் உணவகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஹோட்டல் சமையலறைகளில் வைக்கப்பட்டிருந்த காலிபிளவர் காய்கறிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமலும், அவற்றில் ஏராளமான புழுக்கள் மற்றும் பூச்சி தொற்றுகள் இருப்பதையும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் அவை சமைக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காலிபிளவர் பக்கோடா, கோபி மஞ்சூரியன், கோபி சில்லி உள்ளிட்ட காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவு பண்டங்களுக்கும் உடனடியாக தற்காலிக தடை விதித்து தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே திருமலையில் அஜினோமோட்டோ கலக்கப்படும் சைனீஸ் உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காலிபிளவர் உணவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது திருமலையில் பெரும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.