கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
1 min read
Sri Lankan Navy fires Rameswaram fishermen
21/2/2020
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஒரு மீனவர் காயம் அடைந்தார்.
ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன் கிழமை அதிகாலை 700 விசைபடகில் சுமார் 3 ஆயிரம் பேர் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து தமிழக மீனவர்களை விரட்டினர். தங்கள் பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்தனர்.
சிலரது படகில் ஏறி பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்தனர். மேலும் வலைகளையும் அறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு
திடீரென்று அவர்கள் ஒரு படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த படகில் இருந்தஜேசு என்பவர் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனால் படகில் இருந்த மற்ற 3 பேரும் தங்கள் படகை கரையை நோக்கி திருப்பினர்.
அதன்பின் பாதிக்கப்பட்ட ஜேசுவை ராமேசுவரம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் மதுரையில் உள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எச்சரிக்கை
கடந்த சில வருடங்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது கிடையாது. எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் கைது செய்வார்கள். ஆனால் இப்போது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி இனி துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த எச்சரிக்கை விடு வேண்டும். என்றும் கோருகிறார்கள்.