பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை
1 min read
25.2.2020
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குரபலகோட்டா பகுதியை சேர்ந்த தம்பதியினர், மதனபல்லி அடுத்த அங்கல்லு பகுதியில் நடந்த உறவினரின் திருமணத்திற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம்தேதி தங்களது 6 வயது மகளை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு இரவு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மறுநாள் காலை திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து மதனபல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ரபியை கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 24ம் தேதி மாலை அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட் ஹரிநாத், முகமது ரபிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முகமதுரபியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.