பாரதி, பாரத மாதாவுக்கு முத்தமிட்ட இடம்
1 min readPlace of Mahakavi Bharathi kissed bharatha matha
சுதந்திர போராட்டத்தினபோது ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட பல தியாகிகள் புதுச்சேரியில் தஞ்சம் புகுவது உண்டு. ஏனென்றால் அது பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. புதுச்சேரியில் இருந்தபடி போராட்டங்களை வழி நடத்தியவர்களும் உண்டு. மகாகவி பாரதியாரும் அதேபோல் புதுச்சேரியில் இருந்தார். 1918-ம் ஆண்டு அவர் புதுச்சேரியில் இருந்து தமிழகம் புறப்பட்டார். அவரை கண்காணித்த போலீசார், அவர் புதுச்சேரியை தாண்டியதும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
சிறையில் 27 நாட்கள் இருந்தார். அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர் சர்.சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர் போன்ற சட்ட மேதைகள் முயற்சியின்பேரில் பாராதியார் விடுதலை ஆனார்.
விடுதலையான பாரதி ரெயில் மூலம் டிசம்பர் 15-ந் தேதி நெல்லை வந்தார். பின்னர் அங்கிருந்து மாலை ரெயில் மூலம் கீழக்கடையம் ரெயில் நிலையம் வந்தடைந்தார். மூட்டை முடிச்சுகளுடன் ரெயில் இருந்து இறங்கும்போது பாரதி கீழே விழுந்து விட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை தூக்க முயன்றனர். ஆனால் பாரதியோ “யாரும் என்னை தூக்காதீர்கள். நான் பாரத மாதாவுக்கு முத்தம் கொடுக்கிறேன்” என்றார். இந்த பூமியை பாரததாய் என்று போற்றிய பாரதியார் உண்மையிலேயே ஒரு தாயாக, தெய்வமாக கருதினார். நாம் கோவில் வழியாக செல்லும்போது நம்மையும் அறியாமல் சாமி கும்பிடுவோம் அல்லவா அதேபோல் பாரதி கீழே விழுந்தவுடன் பாரததாயின் நினைவு வந்து முத்தமிட்டார்.
அப்படி முத்தமிட்டு வணங்கிய கீழக்கடையம் ரெயில் நிலையம் பெருமை பெறுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வழியாக மீட்டர் கேஜ் ரெயில்கள் ஓடின. தற்போது அந்த ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, அகலரெயில் பாதை வழியாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
/தகவல்- கடையம் பாலன்.