பெண் தற்கொலை செய்யும் முன் கணவர் அடித்ததை தடுத்த நாய்
1 min read
The dog that prevented her husband from hitting her before committing suicide
28-6-2020
கணவர் அடித்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் கணவர் அடிக்கும்போது அவர்கள் வீட்டு நாய் பாய்ந்து சென்று தடுக்கும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
கணவன்-மனைவி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியை சேர்ந்தவர் லாவண்யா லஹாரி. இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் தனியார் விமானத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரலு என்பவருக்கும் கடந்த 2012 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வரும் என்று கூறப்படுகிறது.
லாவண்யா கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக பதிவிட்டிருந்தார்.
தற்கொலை
வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து லாவண்யாவின் பெற்றோர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளனர். அதில் லாவண்யாவை அவரது கணவர் தாக்கிய பதிவு இடம் பெற்று இருந்தது.
நாய்
அந்த வீடியோவில் வெங்கடேஷ்வரலு அவரது மனைவி லாவண்யாவை கடுமையாக தாக்குவது பதிவாகி இருந்தது. அப்போது அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் பாய்ந்து சென்று தடுக்க முயற்சி செய்கிறது.
பின்னர் லாவண்யா தனது வயிற்றில் கையை வைத்தபடி அழுதுகொண்டே லாவண்யா செல்வதும் அந்த சிசிடிடி கேமராவில் வீடியோ பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நாயின் நன்றி உணர்வை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ்வரலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடிதம்
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட லாவண்யா தற்கொலை செய்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தனது கணவர் வெங்கடேஷ்வரலு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அதனால் தன்னை உடல் மற்றும் மன ரீதியில் கொடுமை படுத்துவதாகவும் எழுதி இருந்தார்.