அமுதாவின் ஆசைகள்-15 / நாடகம் / கடையம் பாலன்
1 min readAmuthavin Aasaikal 15 – Drama by Kadayam Balan
15 வில்லியின் நடிப்பு
காட்சி 15
இடம்& தனி வீடு
பங்குபெறுவோர்- அசோக்குமார், முனியன், விமலா
==================
அசோக்குமார்: (பைலை பார்த்தபடி…) ஹலோ நான் அசோக்குமார் பேசறேன். ஆமா நான் இப்ப காந்தி வீதியில ஒரு வீட்ட பிடிச்சி ஆபீஸ் வைச்சிருக்கேன். என்னை பார்க்க வரணும்ன்னா இங்கேயே வாங்க. சரி… ஓ.கே.
முனியன்: (வந்தபடி) என்ன அண்ணன் இங்கே வந்துட்டிங்க..
அசோக்குமார்: தம்பி உங்கிட்ட மட்டும் சொல்றேன். வீட்ல கொஞ்சம் பிரச்சினை. அதனால் பிஸ்னசை சரியா கவனிக்க முடியல.. தனியா வந்துட்டேன். ஆனா வெளியில ஆபீசுக்குன்னு தனியா வீடு பார்த்திருக்கிறதா சொல்லி இருக்கேன்.
முனியன்: நானும் கேள்விபட்டேன். எல்லாத்துக்கும் அந்த ராஜேஷ்தான் காரணம்ன்னும் கேள்விட்டேன்.
அசோக்குமார்: எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். கேட்க மாட்டேங்கிறா?
முனியன்: கவலைப்படாதீங்க எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாயிடும். அப்ப நான் வரட்டுமா?
அசோக்குமார்: முனியா கொஞ்சம் ராஜேசை கொஞ்சம் வாட்ச் பண்ணிக்கோ.
முனியன்: சரியண்ணேன்.
(செல்கிறான்)
விமலா: (வந்து) சார்…
அசோக்குமார்: வாம்மா என்ன விஷயம்?
விமலா: சார் நீங்க எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கிறதா எங்க அம்மா சொன்னாங்க.
அசோக்குமார்: நான் என்னம்மா உதவி பண்ணினேன். எப்பவாவது பணம் கேட்டப்போ கொஞ்சம் கொடுத்தேன். அதைப்போயி பெரிசா சொல்றியே…
விமலா: அந்த நன்றிக்கடனுக்காகத்தான் ஒண்றை சொல்ல வந்தேன்.
அசோக்குமார்: என்னம்மா புதிர்போடற?
விமலா: நான்… நான்… சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த ராஜேஷ் பொல்லாதவன். அவன் ஏதோ திட்டத்தோடத்தான் உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். அவன்கிட்ட உங்க மனைவி அமுதாவை கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க.
அசோக்குமார்: சரிம்மா… உனக்கு ஏதாவது பணம் வேணுமா?
விமலா: உங்களமாதிரி நல்லவங்க செய்த உதவியால நான் டிகிரி வாங்கிட்டேன். நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யணுமா? அம்மாத்தான் உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா செய்துட்டு வரச்சொன்னாங்க.
அசோக்குமார்: ரொம்ப நன்றிம்மா… இப்போதைக்கு வேலை எதுவும் இல்லை.
விமலா:(உள்ளே சென்று பார்த்துவிட்டு) என்ன சார் உங்க டிரைஸ் எல்லாம் அழுக்கா இருக்கு. நான் துவைக்கிறேன்.
அசோக்குமார்: வேண்டாம் விமலா… நானே துவைச்சிக்கிறேன்.
விமலா: இதுக்கூட உங்களுக்கு செய்யலைன்னா என்ன? நீங்க போட்டிருக்கிற சட்டைய கழற்றுங்க…
அசோக்குமார்: இது இன்னிக்குத்தான் போட்ட சட்டை,
விமலா: ஆனா சட்டையில பின்னாடி அசிங்கம் பட்டிருக்கு. கழற்றி பாருங்க..(அசோக்குமார் சட்டை பட்டனை கழற்றுகிறாள்.) நீங்க என்ன சென்ட் போடறீங்க?
அசோக்குமார்: நான் சென்டே பயன்படுத்த மாட்டேனே.
விமலா: அப்போ உங்க உடம்புல இருந்து நல்ல சுமல் வருதே?
அசோக்குமார்: என்னமோ தெரியல.. ஒருவேளை உன் டிரஸ்ல இருந்து சுமல் வருதோ?
விமலா: இல்லை. சில பேருடைய வியர்வை கெட்ட சுமலை தரும். சிலரது வியர்வை நல்ல சுமலா இருக்கும்ன்னு சொல்வாங்க.
அசோக்குமார்: சரிம்மா நான் வெளியில போகணும். அப்புறமா வந்து எனக்கு வேலை செய். இப்போ நீ உங்க வீட்டுக்கு கிளம்புறீயா?
விமலா: பணத்தையும் முக்கியமான பேப்பர்ஸ்சையும் பீரோல வச்சி பூட்டிட்டு போங்க. நான் உங்க துணிகளை எல்லாம் துவைச்சி காயப்போட்டு வைக்கிறேன். அப்புறமா அரிசி, காய்கறி எல்லாம் வாங்கி சமைச்சியும் வைக்கிறேன்.
அசோக்குமார்: அதெல்லாம் வேண்டாம். அதுக்கு வேண்டிய சட்டி&பானைஎல்லாம் இங்கே இல்லை.
விமலா: இப்போதைக்கு எங்க வீட்டில எடுத்துக்கிட்டு போன்னு எங்க அம்மா சொன்னாங்க. மற்றபடி சாமான்களை நானே கடைக்குப் போய் வாங்கிக்கிறேன்.
அசோக்குமார்: என்ன விமலா ஒரே அன்புத் தொல்லையா இருக்கு… சரி உன்னால முடிஞ்ச வேலைய செய். உனக்கு ஒரு சம்பளம் போட்டு தர்றேன்.
விமலா: வேலையா இது உதவி சார்.
அசோக்குமார்: இல்லை நீயும் உங்க அம்மாவும் கஷ்டப்படறது எனக்கு தெரியும். நான் கொடுக்கிற சம்பளம் உங்களுக்கு உதவியா இருக்கட்டுமே.
விமலா: அப்போ வீட்டு வேலையோட உங்க பிஸ்னஸ் தொடர்பான கணக்கு வழக்குகளையும் நான் பார்த்துக்கிறேன். அசோக்குமார்: ஓகே. நான் கிளம்புறேன். யாரையும் வீட்டுக்குள்ளே விட்டுடாதே.