April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்-17 / நாடகம் / கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal 17 – Drama by Kadayam Balan

காட்சி 17

இடம்& சாலையோரம்

பங்குபெறுவோர்= ராஜேஷ், கைசூப்பி கைலாசம், அமுதா

===================

கைசூப்பி கைலாசம்: என்ன அண்ணே கையில கட்டு. எங்க அடிப்பட்டுது?

ராஜேஷ்: ஒண்ணமில்லை. கை… கைலாசம். (கைக்கட்டை அவிழ்த்து விட்டபடி) நடிக்கிறதும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருக்கு.

கைலாசம்: என்ன நடிப்புக்கா…. எந்த சினிமாவுல இப்பிடி கட்டுப்போட்டமாதரி நடிக்கிறீங்க. எனக்கு நடிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க.-

ராஜேஷ்: அடப்போடா. நம்ம அமுதாவை ஏமாத்துறதுக்குத்தான் இந்த வேஷம். அசோக்குமார்தான் என் கைய ஒடிச்சிட்டான்னு பொய் சொன்னேன்.

கைலாசம்: எதுக்காக இப்படி நடிக்கிறீங்க?

ராஜேஷ்: அமுதாவுக்கு எப்படியாவது அசோக்குமார் மேல கோபம் வரணும். அப்படி வந்தாத்தானே நமக்கு லாபம்.

கைலாசம்: அவங்கத்தான் பிரிஞ்சிட்டாங்களே.

ராஜேஷ்: இப்ப நிரந்தரமா பிரியப்போறாங்க. ஆமா அவங்களுக்கு விவாகரத்து ஆகப்போகுது.

கைலாசம்: ஒரு ஜோடி பிரிஞ்சாத்தான் இன்னொரு ஜோடி சேரும் போல இருக்கு.

ராஜேஷ்: என்னடா உளறுதே.

கைலாசம்: அவங்க பிரியறதுக்கு நான் உதவியா இருக்கேன். அவங்க பிரிஞ்சாத்தானே விமலாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்க.

ராஜேஷ்: (மெதுவாக) அட முட்டாப்பய மவனே உனக்கு கல்யாணம் ஒரு கேடா.

கைலாசம்: என்ன அண்ணே சொன்னிங்க?

ராஜேஷ்: விமலா எப்படியும் உனக்குத்தான்னு சொன்னேன்.

கைலாசம்: அண்ணே அமுதா அக்கா வாராங்க.

ராஜேஷ்: அய்யோ இதக் கட்டி விடுடா-

(அவசர அவரசமாக கைக்கட்டை கட்டுகிறான்)

(அமுதா வருகிறாள்)

ராஜேஷ்: வா அமுதா. என்ன இந்தப்பக்கமா?

அமுதா: கொஞ்சம் பணம் தேவைப்பட்டுது. அதான் பேக் வரைக்கும் போயிட்டு வாறேன்.

ராஜேஷ்: எங்கிட்ட சொல்லி இருக்க கூடாதா. நான்போய் எடுத்து கொடுத்துடுவேனே.

அமுதா: இல்ல உங்களுக்கே கையில அடிபட்டிருக்கு. அதான் நானே போய் பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். ஆமா கை எப்படி இருக்கு.

ராஜேஷ்: வலி மட்டும் இருக்கு. இருந்தாலும் வேலை இருக்கே. இப்பக்கூட உங்க விஷயமாத்தான் ஒரு ஆள பார்க்க வெளியில வந்தேன். அமுதா நீங்க போங்க. ரெண்டு மூணு பாமுல கையெழுத்து போடணும். அப்புறமா உங்க வீட்டுக்கு வாறேன்.

அமுதா: சரி வாங்க.(செல்கிறாள்.)

(அதன்பின் ராஜேஷ் தன் கையில் உள்ள கட்டை அவிழ்கிறான்.)

கைலாசம்: அண்ணே நான் இனிமே அமுதா அக்கா வீட்டு போறதவிட அசோக்குமார் வீட்டுக்கு போறேன்.

ராஜேஷ்: அங்க எதுக்குடா?

கைலாசம்: அசோக்குமார் வீட்லத்தானே விமலா இருக்கிறா? நான் அங்கபோய் சின்னச்சின்ன வேலைய பார்க்கிறேன். வேலை பார்த்தமாதிரியும் இருக்கும். விமலாவுக்கு ஒத்தாசை பண்ணின மாதிரியும் இருக்கும்.

ராஜேஷ்: அவளே அசோக்குமாருக்கு உதவி செய்யத்தான் போய் இருக்கிறாள். அவளுக்கு நீ ஒத்தாசைப்பண்ண போறீயா? கைலாசம்: இல்ல அப்படியே எங்க காதல வளர்த்துக்கிடாலாம் இல்லியா?

(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.