அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா
1 min readCorona to Minister Durakkannu
25/10/2020
எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை உடல்நிலை மோசமாக எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 13–ந் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
உடனடியாக, விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனை சென்றார்.
எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் நலம் விசாரித்தார்
முதலமைச்சர் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். பின்னர் அவரது உடல்நிலை குறித்து டாக்டர் குழுவிடம் கேட்டறிந்தனர்.