தமிழகத்தில் 97,126 பேருக்கு கொரோனா தடுப்பூசி
1 min readCorona vaccine for 97,126 people in Tamil Nadu
30.1.2021
இந்தியா முழுவதும் 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 97,126 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
35 லட்சம் பேர்
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள், தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
நாட்டில் இதுவரை 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,71,974 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
நாட்டில் இதுவரை 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 4,63,793 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், அதற்கடுத்த இடத்தில் ராஜஸ்தான் 3,24,973 பேருடனும், கர்நாடகம் 3,07,891 பேருடனும் மராட்டியம் 2,61,320 பேருடனும் தடுப்பூசி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.நாட்டில் தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1.7 லட்சமாகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.6 சதவீதமாகும்.
தமிழகம்
இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 97,126 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,083 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. நேற்று கேரளாவில் 6,268 பேரும், மகாராஷ்டிராவில் 2,771 பேரும், தமிழகத்தில் 509 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.