உசிலம்பட்டியில் 7 நாள் பெண் குழந்தையைக் கொன்ற பாட்டி கைது
1 min readGrandmother arrested for killing 7-day-old baby girl in Usilampatti
19.2.2021
உசிலம்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசுவை கொலை செய்ததாக பாட்டிளை போலீசார் கைது செய்தனர்.
பெண் சிசு கொலை
பெண் சிசுவை கொலை செய்யும் சம்பவம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அதிகமாக நடந்தது. இதனை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா என அறிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் வேண்டாத பெண் குழந்தைகளை பாதுகாக்க தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பெண் கொலை குறைந்தது.
ஆனாலும் இப்போது இந்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மனைவி சிவபிரியங்கா இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதுள்ள 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும்…
இந்த நிலையில் சிவ பிரியங்காவுக்கு கடந்த வாரம் பழனிபாப்பம்பட்டி அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பேச்சு, மூச்சின்றி கிடப்பதாகவும் கூறி சின்னச்சாமி, சிவபிரியங்கா ஆகியோர் குழந்தையை உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் குழந்தையின் முகத்தில் நகக்கீறல் காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து உசிலம்பட்டி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பாட்டி கைது
போலீசார் நடத்திய விசாரணையில், பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசுவை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறச்செய்து பாட்டி நாகம்மாள் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகம்மாளை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக குழந்தைகளின் தந்தை சின்னச்சாமி, தாய் -சிவபிரியங்கா ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.