அய்யா வைகுண்டர் அவதாரப் பாடல்/ கண்ணம்பி ரத்தினம்
1 min readAyya vaikundar avathara padal/ Kannambi Rathinam
சிவ சிவ சிவ அரகரா ஜெயம்
சிவ சிவ சிவ அரகரா ஜெயம்
சிவ சிவ சிவ அரகரா ஜெயம்
சிவ சிவ சிவ அரகரா ஜெயம்
நம்பிக்கைகொண்டு தொழுவோமய்யா
நாளும் நன்மை பெறுவோமய்யா
பணிந்து வணங்கி பண்பாய் வாழுவோம் – நாங்கள்
பாடல்களைப் பாடி வாழுவோம்
ஐந்துபதி தாங்கல்களை
அனுதினமும் தொழுதிடுவோம்
அய்யா உந்தன் தாங்கல் வணங்குவோம்
கோபுரம் மண்டபம் என்றும் காணுவோம்
எழுதவைப்பாய் பாடவைப்பாய்
அய்யா உந்தன் அருள் வரிகள்
வாழவைப்பாய் உயர வைப்பாயே
கோபுரம் போல அன்பு மக்களை
அறிந்துகொண்டோம் அறிந்துகொண்டோம்
அவதாரப் பெருமையெல்லாம்
தெரிந்துகொண்டோம் தெரிந்துகொண்டோமே-அய்யா
தரிசனங்கள் கண்டுகொண்டோமே
கண்டுகொண்டோம் கண்டுகொண்டோம்
வழிபாட்டு நடைமுறையை
கனிந்து மனம் மகிழ்ந்து வந்தோமே
அய்யாவழியை உணர்ந்துகொண்டோமே
அகில ஏடு அருள் நூலைப்
படிக்க ஆசைகொண்டோமய்யா
அய்யா அருள் புதுமைகளெல்லாம்
மனம் மகிழக் கேட்க வந்தோமே
தென்குமரி பூமியில்
ஐந்து நல்ல பதிகளாம்
அய்யா வைகுண்டர் பதிகளை
வணங்கி வாழ வந்தோமே
தாங்கல் தலங்கள் ஆயிரமாய்
தரணியெங்கும் தோன்றுதய்யா
அகில மக்கள் வணங்கவே
ஆலயங்கள் தோன்றுதே
ஆலயங்கள் கோபுரங்கள்
அதிசயங்கள் காண்கிறோம்
ஆலயங்கள் வணங்கவே
ஆசையோடு வருகிறோம்
திருச்செந்தூர்க் கடலிலே
அவதரித்த அய்யாவே
பொன்பதிகள் கொடிமரம்
மண்டபம் கண்ட அய்யாவே
மின்னும் தங்கக் கோபுரம்
கடலில் கண்ட அய்யாவே
அங்கும் இங்கும் எங்குமே
ஆலயங்கள் வணங்குவோம்
தலைப்பாகை சூடியே
கும்பிடும் முறையைக் கொண்டோமே
அய்யா உந்தன் சன்னதியில்
அடிமை யாரும் இல்லையே
அன்புக்கொடி மக்களை
அரசன் அடிமை செய்திருந்தான்
ஆளுகின்ற மகுடமாய்
தலைப்பாகை தந்தாயே
பள்ளியறைக் கண்ணாடி
தொழுத கையைத் தொழுதிடும்
உனக்குள் நான் இருக்கிறேன்
என்ற உண்மையைச் சொல்லிடும்
உருவமில்லாப் பரம்பொருள்
ஒளி ஒலியாய்த் தோன்றினாய்
பிரம்மம் பிரணவம் பிரபஞ்சம்
காற்று மண்டலம் ஆகினாய்
நெற்றியிலே நாமமிட்டாய்
பதிந்து கூர்மை ஆனதய்யா -திரு
நாமத்தின் வெண்மைபோல்
உள்ளம் வெண்மை ஆகுமே
ஆலயத்தில் வணங்கிட
அந்தக் காலம் வழியில்லை
பதினெண் ஜாதி மக்களை
அழைத்து நாமமிட்டாய அய்யா
தீண்டாமை வேண்டாமென்றாய்
சமபந்தி அன்னமிட்டாய்
ஏற்றத் தாழ்வு இல்லாமல்
இனிய நீதி செய்தாய் அய்யா
ஜாதி மதவெறித்தனம்
வேண்டாமென்று சொன்னாய் அய்யா
ஓர் கிணற்றில் நீராடி
ஒற்றுமையாய் வாழ்கிறார்
வேற்றுமைகள் இல்லாமல்
வெற்றி காணச் சொன்னாய் அய்யா
ஒற்றுமையாய் வாழவே
உயர்ந்த எண்ணம் கொள்ளுவோம்