May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியதில் 14 பேர் பலி

1 min read

Black fungus kills 14 in Karnataka

19.5.2021

கர்நாடகாவில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியதில் 14 பேர் பலினார்கள்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பூஞ்சை நோய்

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த நோய் எதனால் பரவுகிறது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பதை கண்டறிய மருத்துவ நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

14 பேர் சாவு

பெங்களூருவில் 179 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 8 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 52 பேரிடம் பேசினேன். கருப்பு பூஞ்சை நோய் தாக்கப்பட்டதில் 54 பேருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர கொரோனா தொற்று, ஆக்சிஜன் குறைபாடு, அதிகளவில் ஸ்டீராய்டு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்நோய் எளிதில் தாக்குகிறது.

20 ஆயிரம் குப்பிகள்

எச்.ஐ.வி., புற்று நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு 40 முதல் 60 ஆம்ப்போட்ரிசின் மருந்து தேவைப்படுகிறது.

எனவே கர்நாடகாவுக்கு 20 ஆயிரம் குப்பிகளை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுவரை 450 குப்பிகள் மட்டுமே வந்துள்ளன.

இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

அறிவுறுத்தல்

தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கடுமையான தலைவலி, கண்களில் வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், திடீரென்று பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.