இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,86,364 ஆக குறைந்தது
1 min readThe daily corona incidence in India has dropped to 1,86,364
28.5.2021
இந்தியாவில் நேற்று ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 1,86,364 ஆக குறைந்துள்ளது.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலையில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 44 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 2,75,55,457 ஆக உயர்ந்துள்ளது.
3,660 பேர் சாவு
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,660 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,895 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,93,410 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,59,459 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.16 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 90.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 10.42 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 9 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாதிப்பு 4 நாட்களாக 10 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 23,43,152 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 20,57,20,660 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம்
டெல்லி மாநில அரசு அறிவிப்பு
புதுடெல்லி,மே.29-
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் குறையத் தொடங்கியிருக்கிறது. எனினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் படியாகவே உள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 25 வயது வரை 2500 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் அல்லது குடும்ப தலைவர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தால் அந்த குடும்பத்திற்கு 2500 மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.