அத்திரி மலையில் ஊர்வசியாக மாறிய ஊர்வசி
1 min readUrvasi who became Urvasi in Athiri hill
14/6/2021
தற்போது சித்தர்கள் வழிபாடு பொது மக்களிடையே பரவலாக பரவி வருகிறது. மனிதர்கள் உடல் நலத்தோடு மட்டுமின்றி நல்ல மனநலத்தோடு வாழ பல்வேறு வழிகளை கண்டுபிடித்து கொடுத்த விஞ்ஞானிகள். நோயின்றி வாழ மூலிகைகளை கண்டு பிடித்து அதை உண்ணும் விதத்தையும் எடுத்துக் கூறினார்கள். மேலும் மனவலிமை பெற தியான முறைகளையும் அவர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி சொன்னார்கள்.
அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு வசதியான இடமாக மலைப்பகுதியை தேர்ந்து எடுத்தார்கள். அப்படி தேர்ந்து எடுத்த பகுதியில் ஒன்றுதான் அத்ரி மலை. இது நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி நீர்த்தேக்கத்திற்கு மேற்புறம் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இது.
அத்ரி மகரிஷி சித்தர்கள் பலருக்கு குருவாக இருந்தார். அந்த அத்ரி பரமேசுவரர் தனது மனைவி அனுசூயா தேவியுடன் வாழ்ந்து வந்தார். அதனால்தான் இப்பகுதிக்கு அத்ரிமலை என்று பெயர் வந்தது. அத்ரி மகரிஷியின் சீடர்களில் ஒருவர்தான் கோரக்கர். இவர் தனது குருநாதருடன் இங்கு கோவில் கொண்டுள்ளார். இதனால் இந்த கோவிலை கோரக்கநாதர் கோவில் என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். கோரக்கநாதர் இங்கு வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற மூலிகைகளை கண்டு பிடித்தார். இன்னும் சொல்லப்போனால் இரண்டு மூலிகைகளை உருவாக்கியவர் அவர்.
கோரக்கநாதர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது அவரது தவத்தை கலைக்க இந்திரன் முயன்றான். அவன் ஊர்வசி, சந்திரபிரபா என்ற தேவலோக கன்னியர்களை அனுப்பி அவரது தவத்தை கலைக்க சொன்னார். அந்த தேவலோக கன்னியர்களும் அத்ரிமலைக்கு வந்து கோரக்கரின் தவத்தை கலைக்க முயன்றனர். இதனால் கோபம் கொண்ட கோரக்கர், அவர்களை செடியாகவும் மரமாகவும் ஆக சபித்தார். அதன்படி ஊர்வசி கோரக்க மூலிகையாகவும், சந்திரபிரபா யவன மூலிகையாகவும் மாறினார்கள்.
கோரக்கமூலியை ஆஸ்துமா மற்றும் நுரைஈரல் போன்ற நோய்களை குணமாக்கும் வல்லமை படைத்தது.
இந்த கோரக்க மூலிகையை மண்பானையில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஐந்து நாட்கள் ஊறியபின்னர் அந்த தண்ணீரை 100 மிலி அளவு 48 நாட்கள் குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். அதேபோல் சந்திரபிரபா யவன மூலிகையும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
-தகவல்: ரங்கசாமி, கடையம்