சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின்
1 min read
Conditional bail for 5 devotees of Sivashankar Baba
5.7.2021
சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.
சிவசங்கர் பாபா
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா மற்றும் பாரதி ஆகியோர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 2 வாரங்களுக்கு ஐந்து பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்துயிட வேண்டும் என்றும், தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.