பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமா?
1 min readWant to reduce petrol and diesel prices?
23-7-2021
பெட்ரோல், டீசல் உற்பத்தி இந்தியாவில் போதுமானதாக இல்லை. அதனால் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யும்போது பெட்ரோல், டீசல் என தனித்தனியாக நாம் வாங்குவது இல்லை.
எண்ணெய் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை அப்படியே பேரலாக வாங்குகிறோம். ஒரு பேரல் என்பது 159 லிட்டர் ஆகும்.
கச்சா எண்ணெயை நாம் சுத்திகரிப்பு செய்கிறோம். அப்போதுதான் பெட்ரோலாகவும், டீசலாகவும் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் எடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் கழிவில் இருந்துதான் சாலைபோட பயன்படும் தார் செய்கிறார்கள்.
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலைகுறைவாகத்தான் இருக்கும்.
அதை கப்பலில் இங்கு கொண்டு வருவதற்கு ஆகும் செலவு, சுத்தப்படுத்தப்படுத்துவதற்கான செலவு, போக்குவரத்து செலவு ஆகியவற்றுக்காக கலால் வரி விதிக்கப்படுகிறது. அதோடு டீலர் கமிஷனும் அதில் சேர்க்கப்பட்டு மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அதன்பின் மாநில அரசும் அதற்கு வரி(வாட் வரி) விதித்து பொதுமக்களுக்கு விலைக்கு விற்கப்படுகிறது.
இதில், நாட்டிலே மராட்டிய மாநிலம் தான் அதிக வரி விதிக்கிறது. அதாவது 39 சதவீதம் வரி. இதற்கு அடுத்து மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம் 36 சதவீதம் வரி விதிக்கிறார்கள். பஞ்சாப் 35, தெலுங்கானா 33, தமிழ்நாடு 32, கர்நாடகா 32, அசாம் 31 சதவீதம் வரி விதிக்கிறது.
விலைகுறைக்குமா?
தற்போது மத்திய அரசு வரியை குறைத்தால் விலையும் குறையும் என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினர் தமிழ்நாட்டிலாவது வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறையும் என்கிறார்கள். தி.மு.க.வும் தேர்தல் அறிக்கையில் தங்கள் வரியை குறைந்து வழங்குவோம் என்று கூறியிருந்தது.
ஆனால் இப்போது பெட்ரோல் டீசலுக்கான வரியை ஏன் குறைக்கவில்லை என்று சிந்திக்க வேண்டும்?
இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த அரசு செய் செலவு, ஊரடங்கு காரணமாக அரசு வருவாய் இழப்பு.. இவைகளை நோக்கும்போது பெட்ரோல்-டீசலுக்கு வரியை குறைக்க வேண்டிய அவசியம் இல்ல என்ற எண்ணத்தோன்றும்.
ஆனால் இன்னொரு பொதுமக்கள் தரப்பில் இருந்து யோசிக்கும்போது… பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி ஏறிவி்ட்டது. விலை வாசி உயர்வுக்கு சரக்குகளை எடுத்துவரும் வாகன வாடகை உயர்ந்து விட்டதுதான் காரணம். மேலும் இப்போது பெட்ரோல், டீசல் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. எனவே அதன் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் வாதம்.
இதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இரு சக்கர வாகனம் என்பது இப்போது அத்திவாசியம்தான். அந்த வகையில் பெட்ரோல் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்திற்கும் பழுதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.
அதே நேரம் தற்போது உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பஸ், ரெயில்களில்தான் செல்ல வேண்டும். தவிர்க்க முடியாததற்குத்தான் இருசக்கர வாகனத்தையும் காரையும் பயன்படுத்த வேண்டும். மேலும் தற்போது ஒவ்வொரு வீ்ட்டிலும் ஆளுக்கு ஒரு வாகனம் என்று இருக்கிறது. பல இளைஞர்கள் வேலை இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றுகிறார்கள்.
அந்த வகையில் நோக்கினால் அது ஆடம்பரம்தான். அதற்கு விலை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
ஒரு புறம் அத்தியாவசியம். இன்னொரு புறம் ஆடம்பரம்.
என்ன செய்யலாம்..?
இதற்கு ரேஷன் முறையை கொண்டு வரலாம்.
அதாவது சரக்கு வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் விலையை மானியத்தில் கொடுக்கலாம். அப்படியானால் லாரி வாடகையை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இதே போல் பயணிகள் பஸ்சுக்கும் (தனியார் உள்பட) சலுகை விலையில் கொடுக்கலாம்.
தேவைபட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்கலாம்.
இப்படி செய்தால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். சாதாரண பொதுமக்களும் இழப்பை பயன்பெறுவார்கள்.
-கடையம் பாலன்.