தமிழ்நாட்டிற்கு 30.6 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு
1 min read30.6 TMC to Tamil Nadu Ordered to supply water
31.8.2021
தமிழகத்திற்கு 30.6 டிம்.எம்.சி. தண்ணீர் காவிரி ஆற்றில் இருந்து திறந்து விட வேண்டும் என நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை கூட்டம்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
கொரோனா காரணமாக காணொளி மூலம் மட்டுமே நடைபெற்று வந்த காவிரி மேலாண்மை கூட்டம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்றது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமை தலைமை தாங்கினார். தமிழகம் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான, சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வலியுறுத்தல்
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 86.38 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும். ஆனால், 30.6 டிஎம்சி தண்ணீர் பாக்கியுள்ளது. அதை வழங்க வலியுறுத்தியுள்ளது தமிழகம்.
அதற்கு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் ஏற்கனவே காவிரியில் திறந்து விட்டுள்ளோம் என கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நிரம்பிவிடக்கூடாது என்பதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
உத்தரவு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு 30.6 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாது
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக இருமுறை ஒன்றிய அரசிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், மேகதாது பற்றி பேசக் கூடாது என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. புதுச்சேரி சட்டசபை நேற்று மேகதாது அணைக்கு எதிராக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றியது. எனவே புதுச்சேரி தரப்பிலும் மேகதாது அணை பற்றி பேசக்கூடாது என்று கூறப்பட்டது. அதன்படி இந்தக் கூட்டத்தில் கர்நாடகா வழங்க வேண்டிய குடிநீர் பற்றி மட்டும் இந்த கூட்டத்தில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.