இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்
1 min readNew warship for the Indian Navy
30.10.2021
இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது.
போர்க் கப்பல்
இந்திய கடற்படைக்கு பி1135.6 ரகத்தில் 4 போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ரஷியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி கட்டி முடிக்கப்பட்ட கப்பல் ஒன்று ரஷியாவின் காலினிங்கிராடு கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
ரஷியாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய கடற்படை மற்றும் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். துஷில் என பெயரிடப்பட்டு உள்ளது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாப்பு கவசம் என்று பொருள் ஆகும்.
இந்த கப்பல்களில் மேற்பரப்பிலிருந்து தாக்கும் ஏவுகணைகள், சோனார் சிஸ்டம், மேற்பரப்பு கண்காணிப்பு ரேடார், தகவல் தொடர்பு தொகுப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் கருவிகள் போன்ற இந்திய தளவாடங்களும், ரஷியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்பரப்பில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் என முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த போர்க்கப்பல், கடற்படையின் வலுவை மேலும் பலப்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.