April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

19 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் சரிவு

1 min read

After 19 days the daily vulnerability of the corona drops below 2 lakhs

1.2.2022
இந்தியாவில் 19 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் சரிந்தது.

கொரோனா 3-வது அலை

நாட்டில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்தது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,67,059 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 15.77-ல் இருந்து 11.69 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 15.75-ல் இருந்து 15.25 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

கடந்த 12-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1.94 லட்சமாக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு கடந்த 19 நாட்களில் இல்லாத அளவில் குறைந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 499 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 42,154 பேருக்கு தொற்று உறுதியானது. கர்நாடகாவில் 24,172, தமிழ்நாட்டில் 19,280, மகாராஷ்டிராவில் 15,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 729 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் 56, மகாராஷ்டிராவில் 39, பஞ்சாப்பில் 39, டெல்லியில் 38, மேற்கு வங்கத்தில் 36, குஜராத்தில் 35, ராஜஸ்தானில் 23, தமிழ்நாட்டில் 20 பேர் உள்பட 1,192 பேர் பலியாகி உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,96,242 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 2,54,076 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,43,059 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 88,209 குறைவாகும்.

நாடு முழுவதும் இதுவரை 166 கோடியே 68 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 61,45,767 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 14,28,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பரிசோதனை எண்ணிக்கை 73.06 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.