இந்தியாவில் புதிதாக 8,822 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 8,822 newcomers in India
15/6/2022
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 8,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
நாடு முழுவது்ம் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 11-ந் தேதி பாதிப்பு 8,329, 12-ந்தேதி 8,582, 13-ந்தேதி 8,084 ஆகவும் இருந்தது. நேற்று பாதிப்பு 6,594 ஆக குறைந்த நிலையில் இன்று 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 2,956 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 1,885 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் தானே பகுதியை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரானின் புதிய திரிபான பி.ஏ.5 வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கேரளா
கேரளாவில் 1,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் புதிதாக 1,118 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு இன்று முன்தினம் 614 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய பாதிப்பு 82 சதவீதம் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 594, அரியானாவில் 430, தமிழ்நாட்டில் 332, உத்தரபிரதேசத்தில் 284, தெலுங்கானாவில் 219, குஜராத்தில் 165, மேற்கு வங்கத்தில் 135, கோவாவில் 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
15 பேர் சாவு
நாடு முழுகூதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5,718 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 88 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 53,637 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைய தினத்தை விட 3,089 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 7 மரணங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் 4 பேர், டெல்லியில் 2 பேர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் ஒருவர் என மேலும் 15 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,24,792 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 195 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் இன்று 13,58,607 டோஸ்கள் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 4,40,278 மாதிரிகளும், இதுவரை 85.58 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.