May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

வீடியோவில் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram caught in the video/ comedy story by Tapashukumar

2.8.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்வழியில் பண்ருட்டியில் பாத்ரூம் சென்றுவிட்டு மீதி சில்லறை காசாக பத்து ரூபாய் காயின் வாங்கி பையில் போட்டுக்கொண்டு பஸ்சில்வந்தார். திருச்சியில் டிபன்சாப்பிட பஸ்நின்றபோது பாத்ரூம் போயிட்டுவந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்த கண்ணாயிரம் ஆண்கள் கட்டணகழிப்பறை நோக்கி செல்ல அங்கே இருந்தவர் ஐந்து ரூபாய் கட்டணம் கேட்க கண்ணாயிரம் பத்து ரூபா காயினை எடுத்து நீட்டினார்.அதைபார்த்த பாத்ரூம் ஊழியர் என்ன…பத்துரூபாகாயின் செல்லாது…ஐந்து ரூபா கொடுங்க என்று சொல்ல கண்ணாயிரம் கோபத்தில் என்ன சின்னப்புள்ளத்தனமாக இருக்கு பண்ருட்டியில் பாத்ரூமுல கொடுத்த பத்து ரூபாகாயின் திருச்சி பாத்ரூமுல செல்லாதா என்று சத்தம் போட பாத்ரூம்காரர் பதிலுக்கு சத்தம்போட கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி பஸ்நின்ற இடத்துக்கு வந்தார்.
அவரை பார்த்த அவர் மனைவி பூங்கொடி என்னங்க. பாத்ரூம் போனியளா இல்லையா…உடனே வந்திட்டிங்க..என்று கேட்க கண்ணாயிரம் கண்ணீர்விட்டபடி ரூபா நோட்டிலதான் செல்லாதது என்று சொல்வாங்க..இப்போ காசிலேயும் செல்லாத காசுன்னு சொல்லுறாங்க…இதைபாரு..இந்த பத்து ரூபா காயினைபாரு..நல்லா அழகா மஞ்சளா பளபளன்னுதானே இருக்கு..எவ்வளவு கனமா வேற இருக்கு..இதை செல்லாதுங்கிறான்…பைசாவில ஏதாவது அடிபட்டு ஏழுத்துஎதுவும் தெரியாம இருந்தா கூட செல்லாதுன்னு சொல்லலாம்..இதைபாரு…பத்து ரூபான்னு எவ்வளவு தெளிவா குறிப்பிட்டிருக்கு…இதை செல்லாதுன்னு சொன்னா எப்படி என்று கேட்டார்.
பூங்கொடி அவரிடம் இந்த பத்து ரூபா காயினை எங்கே வாங்கினிங்க என்று கேட்க…கண்ணாயிரம் அதுவா..பண்ருட்டி பாத்ரூமுல சில்லறை மாத்தும்போது வாங்கினேன்.. திருச்சியிலே இதை செல்லாதிங்கிறாங்க…இது நியாயமா என்று கேட்டார்.
பூங்கொடி கோபத்துடன்…ஏங்க அந்த காசை வாங்கினிங்க…யாருக்கிட்டே கொடுத்தாலும் வாங்கமாட்டாங்க…இதை வச்சிக்கிட்டு என்னப்பண்ணுறது..உங்களை வச்சிக்கிட்டு ஒண்ணும் பண்ணமுடியாது..ஊருல போயி பழைய காயின்களோடு சேர்த்துவையுங்க என்று திட்ட கண்ணாயிரம் மெல்ல நான் பாத்ரூம் போகணும் காசு கொடு..ம் நான் அழுதிடுவேன் பாத்ரூம் போகணும் காசு கொடு என்று பிடிவாதம் பிடித்தார்.
பூங்கொடி..ம் சத்தம் போடக்கூடாது…ஓட்டலில் டிபன் சாப்பிட போவோம்..ஓட்டலில பாத்ரூம் இருக்கும்.அங்கே பிரியா பாத்ரூம் போகலாம்…காசு கொடுக்க வேண்டியது இல்லை…வாங்க…வாங்க என்று கண்ணாயிரத்தை அழைத்து கொண்டு ஓட்டலுக்கு சென்றார்.
ஓட்டலை கண்ணாயிரம் ஆ..என்று பார்த்தபடி செல்ல பூங்கொடி அவரை அதட்டினார். பாத்ரூம் எங்கே இருக்கு என்று கேட்டு..சீக்கிரம் போயிட்டுவாங்க என்று விரட்ட கண்ணாயிரம் ஓட்டலில் அங்கும் இங்கும் பாத்ரரூமை தேடி தடுமாற சப்பளையர் அவரை பார்த்து என்னவேணும் என்று கேட்க…கண்ணாயிரம் ஒருவிரலை காட்டி பாத்ரூம் என்க…அவர் பின்பக்கம் போங்க என்று வழிகாட்ட கண்ணாயிரம் அந்தபகுதிக்கு சென்றார். ஆண்கள் பகுதி பக்கம் சென்றவர்…அப்பாட..இங்கே காசு வசூலிக்க ஆள் இல்லை என்றபடி அறைக்குள் நுழைந்தார். இரண்டு நிமிடம் கழித்து…அப்பாட..இப்பந்தான் திருப்தியா இருக்கு என்றபடி ..முகத்தையெல்லாம் கழுவிவிட்டு வெளியே வந்தவர் அப்படியே வேகமாக ஓட்டலுக்குள் புகுந்தார்.
பூங்கொடி அவரைபார்த்து ஏங்க…இங்கே வாங்க..உங்களுக்கு இடம்பிடித்துவச்சிருக்கேன்..வாங்க…வாங்க..என்று கத்த கண்ணாயிரம் வேகமாக அந்த சீட்டைபிடிக்க ஓடினார். அதற்குள் இன்னொருவர் அந்த சீட்டில் உட்காரமுயல ..கண்ணாயிரம் அவரைபார்த்து என்சீட்டு…என்சீட்டு என்று கத்த பூங்கொடியும் ஏங்க அவருக்கு இடம்பிடிச்சி வச்சிருக்கேன்..இடம்விடுங்க என்று சத்தம்போட அந்த நபர் அடா…பஸ்சா..இது இடம்பிடிக்க இந்த போட்டி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

கண்ணாயிரம் அந்த சீட்டில் ஓடிவந்து உட்காரமுயல அந்த இருக்கை கீழே உருள..அதை நிமிர்த்திவைப்பதற்கு கண்ணாயிரம் முயல எல்லோரும் சிரித்தனர்.
பூங்கொடி என்னங்க மெதுவா வரவேண்டியதுதானே..இப்படியா இருக்கையையெல்லாம் கீழேதள்ளிவிடுறது என்று ஏசியபடி அந்த இருக்கையை நிமிர்த்திவைக்க உதவினார்.
கண்ணாயிரம்படப்படப்புடன் இருக்கையை நிமிர்த்திவைத்து அப்பாட..என்று அமர்ந்தார். சர்வர் அருகில்வந்து…என்னசாப்பிடுறீங்க..என்று கேட்க…கண்ணாயிரம் ஏங்க நாங்க இன்னும் சாப்பிடல அதுக்குள்ளே என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்டா எப்படி ..என்னவேணுமுன்னு கேளுங்க என்று சொல்ல சர்வர் புன்னகை சிந்தியபடி..இட்லி தோசை சப்பாத்தி புரோட்டா…இடியாப்பம்…இருக்கு..உங்களுக்கு என்னவேணும் என்றுகேட்டார்.கண்ணாயிரமும் சிரித்தபடி இடியாப்பம்..என்க பூங்கொடி எனக்கு இட்லி என்று சொல்ல சர்வர் அங்கிருந்து நகர்ந்தார்.
அப்போது சுடிதார் சுதா வாலிபர்கள் புடைசூழ …அங்கே வேகமாக வர ஓட்டலில் இருந்த அனைவர் கண்களும் அவளை பார்க்க கண்ணாயிரம் மெல்ல சுடிதார்சுதாவை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார். சுடிதார்சுதா ஒருசீட்டில் அமர..அவரை சுற்றி வாலிபர்கள் அமர…அந்த இடமே பரப்பானது. சர்வர் என்று ஒருவாலிபர் கத்த இரண்டு சர்வர்கள் அங்கே ஓடிவந்தார்கள். சொல்லுங்க..என்ன சாப்பிடிரிங்க…என்று கேட்க.. ஆளுக்கு இரண்டு புரோட்டா..என்று சொல்ல..சுடிதார் சுதா மெல்ல கொஞ்சும் குரலில் எனக்கு புரோட்டா வேண்டாம்…தோசை கொடுங்க…எந்த தோசை நல்லா இருக்கும் என்று கேட்டார். மசால் தோசை சாப்பிடுங்க…நல்லா மொரு மொருன்னு மணப்பாறை முறுக்குமாதிரி சுவையாக இருக்கும் என்று சொன்னார்.
உடனே சுடிதார்சுதா..நான்அரிசி முறுக்கு சாப்பிடிருக்கேன்..இந்த மணப்பாறை முறுக்க பாத்ததே இல்லையே…அது எப்படி இருக்கும் என்று கேட்டாள். சர்வர் புன்னகை பூத்தபடி ..மணப்பாறை முறுக்கு மணப்பாறை என்ற இடத்தில் செய்யப்படுகிறது. இந்த முறுக்கு எப்படி செய்றாங்க தெரியுமா…நல்ல பச்சரிசி மாவு…அதில் நல்ல சுவையான பால் ஊற்றி பினைவாங்க.. கொஞ்சம் எள் தூவுவாங்க. அப்புறம்..பாருங்க…கொதிக்கும் நெய்யிலே முறுக்கை சுட்டு சுளை சுளையா எடுப்பாங்க… சாப்பிடின்னா..அப்படி தேனா இருக்கும்..என்று சொல்ல வாலிபர்கள் நாக்கில் எச்சில் ஊறியது.அந்த முறுக்கு இங்கே கிடைக்குமா என்று அவர்கள் ஆர்வத்தோடு கேட்க நீங்க..மணப்பாறையிலே போய் சாப்பிடிங்கன்னாதான் நல்ல சுவையா இருக்கும்…திருச்சியிலிருந்து பக்கம்தான்..என்று சர்வர் சொன்னதும்..வாலிபர்கள்..ரைட்டு..மணப்பாறை போறோம்..முறுக்கு சாப்பிடுறோம் என்று சொல்லிவிட்டு புரோட்டாவரட்டும்..சுடிதார்சுதாவுக்கு மசாலாதோசை கொண்டுவாங்க என்றுஆர்டர்கொடுத்தனர்.
கண்ணாயிரம் இதை ஒட்டுக்கேட்டுக்கொண்டு இருந்தார். மணப்பாறை மணப்பாறைன்னு ஏதோ கேட்குது மற்றபடி ஒண்ணும்புரியல…சரி எதையோ சொல்லிட்டுப்போகட்டும்….என்றபடி அமைதியாக இருந்தார்.பூங்கொடியும் ..ம்..இந்த சுடிதார்சுதா என்ன மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுக்கா…அவளுக்கு எதுன்னாலும் ஜீரணமாகும்..அப்படிப்பட்ட ஆளு அவா…நமக்கு அப்படியா..இட்லியும் இடியாப்பமும் சாப்பிடுறோம் என்றபடி இட்லியை பிய்த்து சட்னியில் தொட்டு சுவைத்தார்.
மசால் தோசைவந்ததும் சுடிதார்சுதா சுவைத்து சாப்பிட கண்ணாயிரம் மெல்ல திரும்பிபார்த்துவிட்டு…ம்..என்ன தோசை…இது..ம் நமக்கெல்லாம் ஆகாது…நமக்கு இன்னும் இடியாப்பம் வரல..ஏங்க..இடியாப்பம் ஆர்டர்கொடுத்து அரைமணி நேரமாச்சு ..என்று கண்ணாயிரம் கத்த..சர்வர் ஓடிவந்து ஆப்பம் இருக்கு…இடியாப்பம் இல்ல..சாப்பிடுறியளா என்று கேட்டார். அதான நாம கேட்டா அது கிடைக்காதே…ஆப்பமே கொடுங்க..என்று கண்ணாயிரம் சொல்ல சர்வர் வேகமாக சென்று ஆப்பம் எடுத்துவந்தார். சட்னிவைத்து கண்ணாயிரம் ரசித்து சாப்பிட்டார். ஆப்பத்துக்கும் இடியாப்பத்துக்கும் என்ன வித்தியாசம்..கேட்டா…அடிக்கவருவாங்க..எதுக்கு வம்பு என்றபடி ..ஆப்பம் சாப்பிட்டார்.

வாலிபர்கள் ஆர்டர்செய்த புரோட்டாவந்ததும் ஒருபிடிபிடித்தார்கள்..திருச்சி புரோட்டா நல்லாத்தான் இருக்கு என்றவர்கள் பில்வந்ததும் சுடிதார்சுதா மசாலாதோசைக்கும் சேர்த்து பணம் செலுத்திவிட்டு வெளியேவந்தார்கள். பூங்கொடி பில்வந்ததும் பணம்கட்ட கேஷியர் அருகில் செல்ல கண்ணாயிரம்..ஓட்டலில பிரிதான பாத்ரூம்…இன்னொருதரம் போயிட்டு வந்துடுவோம் என்றபடி ஓட்டலின் பின்பக்கமுள்ள பாத்ரூமுக்கு சென்றார்.
பூங்கொடி பணம்கட்டிவிட்டு கண்ணாயிரத்தை தேட அவரை காணாததால் அவர் பஸ்சிலேபோய் ஏறியிருப்பாரு..நாம அங்கே போவோம் என்றபடி பஸ்சுக்கு சென்றார்.
பாத்ரூம் சென்றகண்ணாயிரம் திரும்பியபோது மின்தடை ஏற்பட்டதால் எங்கும் ஒரே இருட்டு…அவர் தட்டுதடுமாறி…அங்கும் இங்கும் சென்று…என்னய்யா .திசைமாறி வேறு எங்கேயும் போயிடப்போறன்..தெரியாத ஊருல கரண்டு போனா நான் என்னசெய்வேன் என்று முணங்கியபடி உத்தேசமா கணக்குவச்சி..பஸ்சை நோக்கி நடந்தார். அப்போது எங்கே போறீங்க..இங்கே வாங்க..என்று ஒருபெண்குரல் கண்ணாயிரம் கையைபிடித்து இழுக்க …யார்நீங்க…யார்நீங்க என்று கண்ணாயிரம் கேட்க…அந்த பெண் பதில் தராமல்..அதுவா முக்கியம் பஸ்சிலே போய் ஏறுங்க..என்று சொல்ல..கண்ணாயிரம்….இது ஏங்கோ கேட்டகுரல் மாதிரி இருக்க என்று சிந்தித்த வேளையில் கரண்டுவந்தது.
அந்த மகிழ்ச்சியில் சுடிதார் சுதா வேகமாக கண்ணாயிரம் கையைபிடித்து குலுக்க வாலிபர் ஒருவர் வீடியோ எடுக்க..கண்ணாயிரம் கோபத்தில் யார்ரா அவன்..ஏய் யார்ரா அவன் படம்புடிக்கிறது..ஏய் நிறுத்துடா…என்று கத்த அந்தவாலிபர்..வீடியோ எடுத்துவிட்டு பஸ்சில் ஓடிச்சென்று ஏறினார்.
சுடிதார்சுதா கண்ணாயிரத்தைபார்த்து சிரிக்க என்ன இது விளையாட்டு.நல்லவேளை பூங்கொடிபாக்கல…இல்லன்னா ஒருவழியாகி இருக்கும்..நான் கைகுலுக்கணுமுன்னு கேட்டேனா…ஏன் இந்த அதிகபிரசிங்கித்தனம்…செல் இருந்தா எதை வேணுமானாலும் எடுத்திடுறதா…என்னா அயோக்கியத்தனம்…என்றபடி கண்ணாயிரம் பஸ்சை நோக்கி நடந்தார்.
அந்த வீடியோவில ..சுடிதார்சுதா கையை குலுக்கினது பதிவாகி இருக்குமோ…ச்சே..இருட்டில அதெல்லாம் பதிவாகி இருக்காது…அவ்வளவு நுட்பமாவா எடுத்திருப்பான்..ச்சே..இருக்காது. ஓருவேளை…சுடிதார்சுதா நம்ம கைகுலூக்குறதுபதிவாகி இருந்தா..அது என் உருவம் இல்லைன்னு சொல்லிடலாம்…நம்மகிட்டயா விளையாடுறாங்க…என்றபடி கண்ணாயிரம் பஸ்சில் ஏறினார்.
அப்போது..கண்ணாயிரத்துக்கு சுடிதார்சுதா கைகுலுக்கிய வீடியோ காட்சியை செல்போன ல் எடுத்த வாலிபர் ரசித்து கொண்டிருந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.