சிவகிரி அருகே இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர் வெட்டிக்கொலை
1 min readA youth who mocked a young woman was hacked to death near Sivagiri
28.11.2022
சிவகிரி அருகே இளம் பெண்ணை கேலி செய்த வாலிபரை வெட்டி படுகொலை செய்த அப்பெண்ணின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
கேலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சிவக்குமார் (வயது 22). இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. மேலும் சிவக்குமார் கஞ்சா போதைக்கும் அடிமையானவர் என கூறப்படுகிறது.
சிவக்குமாரும் அவரது நண்பர்களும் காமராஜர் காலனி தெருவில் அமர்ந்து இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாம். அப்போது சிவக்குமார் அவ்வழியே செல்லும் பெண்களை கேலியும், கிண்டலும் செய்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே சென்ற மயில் என்பவரது மகளை சிவக்குமாரும் அவரது நண்பர்களும் கேலி செய்துள்ளனர்.
கொலை
இதுகுறித்து அந்த இளம்பெண் அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா கருப்பையா மகன் செல்வக்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார் நேற்று இரவு அரிவாளுடன் காமராஜர் காலனி தெருவிற்கு சென்று அங்கிருந்த சிவக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவக்குமார் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து வாலிபரை வெட்டி படுகொலை செய்த செல்வக்குமாரை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் சிவகிரி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.