திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை… 6 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம்
1 min read
Thiruvannamalai ATM Robbery… 6 Cops Transferred to Armed Forces
13.2.2023
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை எதிரொலியாக 6 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
கொள்ளை
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த 4 ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
மாற்றம்
இந்நிலையில், திருவண்ணாமலையில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.