May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

1 min read

2 people arrested under POCSO Act for sexual harassment near Tenkasi

31.3.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் ஊர்மேலழகியான் பகுதிகளில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் திருப்பத்தூரில் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
அவருக்கும், திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருடைய மகன் விக்னேஷ் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விக்னேஷ், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவரின் செல்போனை எடுத்து பேசியுள்ளார்.

அப்போது போனை எடுத்த 16 வயது சிறுமிக்கும், விக்னேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கைது

இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டது. போலீசார் போச்சோ சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்னொருவர்

மேலும் தென்காசி அருகே
ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் மாணிக்கம் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளியை கைது செய்து விடுவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மாணிக்கம் ஆய்க்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக தென்காசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் போலீசார் அங்கு சென்று மாணிக்கத்தை கைது செய்தனர். அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.