தோரணமலையில் தமிழ்புத்தாண்டு விழா; சமூக சேவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது
1 min read
Tamil New Year celebration at Murugan temple in Thoranamalai; Awarded for social services
12/4/2023
தோரணமலை முருகன் கோவிலில் வௌதமிழ்புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சமூக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. அகத்தியர் வாசம் செய்த இத்தலத்தில் அவரது சீடர் தேரையர் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் தமிழ்மாதம் கடைசி வெள்ளி, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம், தமிழ்புத்தாண்டு, வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் விழா கொண்டாடப்படும்.
அந்த வகையில் நாளை( வெள்ளிக்கிழமை) சித்திரை விசு என்னும் தமிழ்புத்தாண்டு விழா வெகுவிமர்சிசையாக கொண்டாப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடிவாரத்தில் உள்ள விநாயகர், மலை உச்சியில் உள்ள முருகப்பெருமான், பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
காலை 10 மணிக்கு உற்சவரான வள்ளி&தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு அடிவாரத்தில் வீதி உலாவாக எடுத்துவரப்படும். அதே நேரம் 51 பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12.30 மணிக்கு பாவூர்சத்திரம் மழலையர் பள்ளி மாணவ&மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் பாளையங்கோட்டை சங்கர நிருத்யாலயா சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவில் விவசாயக் கருவிகளை உற்சவர் முன்பு வைத்து பூஜை நடைபெறும். அபபோது சமுக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படும். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தோரணமலை பற்றி எழுதிய இரண்டு இசைப்பாடல்கள் வெளியிடப்படுகிறது. அதனை எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் தர்மராஜ் வெளியிடுகிறார். அன்றைய தினம் காலையிலும் மதியமும் அன்னதானம் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
தோரணமலையில் வேறு எங்கும் இல்லாத வகையில் தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பவுர்ணமி நாளில் காலையிலும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. எந்த பின்புலமும் இல்லாமல் பக்தர்களின் உதவியுடன் மட்டுமே இந்த நற் செயல்கள் நடக்கிறது. எனவே அன்னதானம் மற்றும் கோவிலுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து புண்ணியம் தேடலாம் என்று கோவில் அறங்காவலர் ஆ.செண்பகராமன் கூறினார். மேலும் அவர் கூறும்போது கோவிலில் திருப்பணிகள் நடக்க இருப்பதாகவும், மூலஸ்தானம் மாறாமல் கோவிலை புதுப்பிக்கப்படுவதாகவும் தேரையர் சன்னதி அமைக்கப்படுவதாகவும் அதற்கான வேலைகளையும் பக்தர்கள் மூலம் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.