2ஜி அலைக்கற்றை ஊழல் மேல் முறையீட்டு வழக்கில் சிபிஐ, ஆ.ராசா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
1 min read
CBI orders A. Raza to file reply in 2G spectrum scam appeal case
15/4/2023
2ஜி அலைக்கற்றை ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முறைகேடு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது.
இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
7 நீதிபதிகள் விசாரணை
இவ்வழக்கில் இதுவரை 6 நீதிபதிகள் விசாரணை நடத்தி உள்ளனர். முதல் நீதிபதியான பிர்ஜேஷ் சேத்தி நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தார். கரோனா பெருந்தொற்று காலத்தில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி நீதிபதி பிர்ஜேஷ் சேத்தி மீண்டும் வழக்கு விசாரணையை தொடர்ந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அவர் ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஆஷா மேனன், யோகேஷ் கன்னா, எஸ்.பி.கர்க், நஜ்மி, ஏ.கே.சாவ்லா ஆகிய நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர்.
தற்போது 7-வது நீதிபதியாக தினேஷ் குமார் சர்மா வழக்கை விசாரித்து வருகிறார். சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த 3 மேல்முறையீட்டு மனுக்களை அவர் ஒரே வழக்காக மாற்றியுள்ளார்.
அவர் முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி தினேஷ் குமார் சர்மா உத்தரவிட்டார்.
பதில் மனுக்கள் 5 பக்கங்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணைமே 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.