தமிழகத்துக்கு 6.25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை- மத்திய அரசுக்கு பொது சுகாதாரத் துறை கடிதம்
1 min read
Tamil Nadu needs 6.25 lakh corona vaccines- letter from Public Health Department to Central Govt
15.4.2023
தமிழகத்துக்கு 6.25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று மத்திய அரசுக்கு பொது சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.
தடுப்பூசி
மத்திய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையா் டாக்டா் வீணா தவணுக்கு, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 2021, ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. 18 வயதைக் கடந்த 97.89 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 92.47 சதவீதம் பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணையை (பூஸ்டா்) பொருத்தவரை 17.04 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா். தமிழகத்துக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து இதுவரை 11.93 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசி 9.29 கோடி, கோவேக்சின் 2.18 கோடி, கோர்பிவேக்ஸ் தடுப்பூசி 45.20 லட்சம் தவணைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழகத்தில் தற்போது எந்த வகை கொரோனா தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. அதேவேளையில், தமிழகத்தில் இன்னமும் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 86 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாம் தவணையும், 4.42 கோடி போ் முன்னெச்சரிக்கை தவணையும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அதைக் கருத்தில் கொண்டு, காலாவதி காலம் அதிகம் உள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும், 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளையும், 75,000 கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.