சந்திரயான் – 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது
1 min read
ISRO lifts Chandrayaan-3 into final orbit
26.7.2023-
சந்திரயான் – 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3
நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே நான்கு கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது.
கடைசி சுற்றுப்பாதை
இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, விண்கலத்தை நிலவை நோக்கி பயணிக்கச்செய்யும் செயல்முறை ஆகஸ்ட் 1, 2023 அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.